சென்னை தியாகராய நகரில் கடந்த ஜனவரி 11ம் நாள்,  தூய்மைப் பணியாளர் பத்மா வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ஒரு தள்ளுவண்டியில் மேல் இருந்த பிளாஸ்டிக் கவரை பார்த்தார், அதில் குப்பை தான் இருக்கும் என நினைத்துத் திறந்து பார்த்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார். காரணம், அதில் ஏராளமான தங்க நகைகள் இருந்தது, இதனைக் கண்டு திகைத்துப்போன பத்மா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நகைகளை ஒப்படைத்தார். பின்னர், அந்த நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பத்மாவை பலரும் பாராட்டிவந்தனர். அந்த தங்கத்தின்  மொத்த மதிப்பு 45 பவுன் அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதன் மதிப்பது ஏறக்குறைய 45 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

Advertisment

44

ஏழ்மையான குடும்பமாக இருந்த போதிலும் கிடைத்த தங்க நகைகளைத் தானே எடுத்துக்கொள்ள நினைக்காமல் உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த அந்த தூய்மை பணியாளரின் செயலை அறிந்து நெகிழ்ந்த முதல்வர் பத்மாவை அழைத்துப் பாராட்டியதுடன் ஒரு லட்ச ரூபாயைப் பரிசளித்தார். இதனைத் தொடர்ந்து லலிதா ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரும் பத்மாவை அழைத்துப் பரிசளித்துப் பாராட்டினார். தொடர்ந்து பலரும் பாராட்டி வந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த்தும் பத்மாவை அழைத்துப் பாராட்டியுள்ளார். அதோடு அவருக்குத் தங்க சங்கிலியையும் பரிசாக அளித்துள்ளார்.  

Advertisment

ஏற்கனவே, பத்மாவின் கணவர் சுப்பிரமணி கொரோன காலத்தில்  மெரினா கடற்கரையில் கிடைத்த 1.50 லட்ச ரூபாயை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியினரின் குடும்பம் வறுமையின் பிடியில் இருந்துவரும் நிலையிலும், இவர்களின் நேர்மையான குணம் அனைவராலும் பாராட்டத்தக்க வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.