The government's first objective is to gradually reduce the number of TASMAC outlets - Minister Muthusamy interview Photograph: (dmk)
ஈரோட்டில் இன்று வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் பேசுகையில், ''டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொள்கின்றனர். அப்படி அல்ல. பாட்டில் திரும்ப அளிக்கும்போது 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு லேபிள் ஒட்டுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற்று வைப்பதற்கு இடம் இல்லாமல் சிரமம் உள்ளது. இதுபோன்ற சிரமங்கள் வருங்காலங்களில் தவிர்க்க இனி வரும் கடைகள் குறைந்தளவு 500 சதுர அடியில் கடை இருக்க வேண்டும் என கட்டாயமாக இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது.எப்.எல் 2 கொடுக்க வேண்டியது அரசின் விருப்பமோ, திட்டமோ அல்ல.டாஸ்மாக் கடைகள் இல்லாத இடத்தில் கள்ளச்சாராயம்,வெளிமாநிலத்தில் இருந்து வரும் மது போன்ற தவறான இடத்திற்கு சென்று விடக்கூடாது என தடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என உறுதிமொழி ஏற்றது மதுவை மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். கடையை ஒரே நாளில் உத்தரவிட்டு மூட முடியும். ஆனால் அதற்கு பிறகு ஏற்படும் நிலை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே படிப்படியாக குறைத்து கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்துள்ளோம். இதற்கு தகுந்தாற்போல் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சமாளிப்பதற்காக சொல்லவில்லை. மதுவை பழகிவிட்டனர். தவறாக சொல்ல முடியாது. அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ,பணிச்சுமையோ இப்படி சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இதனை சொன்னால் பத்து விதமாக சித்தரிக்கின்றனர். விருப்பப்பட்டு மதுவாங்க செலவழிப்பது அல்ல. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது. சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடையில் தினமும் பணத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை மாற்றி கொண்டு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது.
தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் நிறுத்துவதற்காக மனுக்கள் வந்துள்ளது. அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெட்ரா பேக் நடைமுறைப்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளது. டெட்ரா பேக் திட்டம் மது விற்பனையை பிரமோட் செய்வதற்கு அல்ல. அரசியல் கட்சிகள்,பொதுமக்கள் மற்றும் நீதிமன்றம் கூறும் கருத்தை வைத்து தான் முடிவெடுக்க முடியும். எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எங்காவது மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற்றிருந்தால் தனிப்பட்டவரின் தவறு. அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 451 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.