'The evil consequences of building the DMK government!' - Anbumani strongly condemns Photograph: (pmk)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கஞ்சா போதையில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இரு அப்பாவிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அப்பாவி மக்களின் உயிர்களுக்குக் கூட பாதுகாப்பு வழங்குவதற்கு துப்பற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.
நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு என்ற கிராமத்திற்கு நேற்றிரவு வந்த அந்த கஞ்சா போதை கும்பல், அவ்வழியே இரு சக்கர ஊர்தியில் சென்ற இருவரை அரிவாளால் வெட்டியதுடன், அவர்களின் இரு சக்கர ஊர்தியையும் பறித்துக் கொண்டு பெரும்பத்து கிராமத்திற்கு சென்றது, அங்குள்ள தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பயந்து தப்பி ஓடிய பொதுமக்களை அரிவாளால் வெட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஜான் என்ற மாற்றுத்திறனாளியும், வட இந்தியத் தொழிலாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
அங்கிருந்து புளியங்குளம் கிராமத்துக்குச் சென்ற கும்பல் அங்குள்ள மக்களையும் சரமாரியாக வெட்டியுள்ளது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், தாக்குதலைத் தடுக்கவோ, கஞ்சா போதைக் கும்பலை கைது செய்யவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியாத நிலையில், கஞ்சா போதையில் ஏற்பட்ட வெறித்தனம் தான் இந்தகைய கொடூரத் தாக்குதலை நடத்த அந்தக் கும்பலைத் தூண்டியுள்ளது என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கஞ்சா தடையின்றி கிடைப்பது தான் இத்தகைய கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு காரணம் ஆகும். இதைக் கூட தடுப்பதற்கு வக்கற்ற திமுக அரசு அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா போதையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஆண்டுக்கு குறைந்தது 22 லட்சம் கிலோ கஞ்சா வணிகம் செய்யப்படும் நிலை உருவாகியிருக்கிறது. காவல்துறையை வலுப்படுத்த வேண்டிய திமுக அரசு, அதை செய்யாமல் கஞ்சா சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியதன் தீய விளைவு தான் இத்தகைய தாக்குதல் ஆகும். இதற்கு காரணமான திமுக வுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்' என தெரிவித்துள்ளார்.
Follow Us