வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (02.12.2025) காலை 09.35 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்), கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது இன்று (02.12.2025) காலை இந்திய நேரப்படி 05.30 மணியளவில், தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதிகள், வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
இது சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 130 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வட-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தென்-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், (அட்சரேகை 12.9°N மற்றும் தீர்க்கரேகை 80.5°E க்கு) நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலத்தின் மையத்திற்கும் வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் சுமார் 25 கி.மீ ஆகும். இது தொடர்ந்து மெதுவாக தென்மேற்கு திசையில் வடமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாகவே நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, கடற்கரையை நோக்கி நகரும்போது, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (Well-marked low-pressure area) வலுவிழக்க அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்களால் (DWR) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us