nagendran Photograph: (bjp)
திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று 22.12.2025 காலை 10.30 மணிக்கு தொடங்கியது. மூன்று முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு தொழில் முனைவோர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் பி.டி.ஆர்., கோவி செழியன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவில் கனிமொழி, தமிழரசி உள்ளிட்ட இரண்டு பெண்கள் உள்ளனர்.தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எம்.அப்துல்லா, எழிலன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். டி.கே.எஸ்.இளங்கோவன், காண்ஸ்டண்டைன் ரவீந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் குழுவில் உள்ளனர்.
இதுகுறித்து கனிமொழி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'சென்னை - அண்ணா அறிவாலயத்தில், இன்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கழகத் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, ஆரம்பகட்டப் பணிகள் குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசித்தோம்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது பதிவை மேற்கோள் காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் வெளியிட்டுள்ள பதிவில், 'தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவில் இல்லை!
மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தெருத்தெருவாகப் போராடி வரும் வேளையில், ஒய்யாரமாகக் குளிர்சாதன அறையில் அமர்ந்து, அடுத்த தேர்தலுக்கான அறிக்கையை தயாரிப்பது, ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாகத் தான் இருக்கிறது.
கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்படாத நிலையில், புதிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய அவசியமென்ன? ஒரு வேளை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்ட வாக்குறுதிகளைக் கண்டுபிடித்து அதை வைத்தே மீண்டும் ஒரு அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு இதுவோ? அல்லது, வேறென்னென்ன டுபாக்கூர் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்கள் காதில் பூ சுற்றலாம் எனத் திட்டமிடுவதற்கான குழு இதுவோ எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
சரி, ஃபோட்டோஷூட் கூட்டத்தின் குறிக்கோள் எதுவாக இருந்தால் என்ன! எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்கள்தான்! 'நாடு போற்றும் நல்லாட்சி' என்னும் போர்வையில் வாக்குறுதியை வைத்து நாடகமாடும் திசைதிருப்பு கோஷ்டியின் கூடாரத்தைத் தமிழக மக்கள் களைந்தெறியும் நாள் ஒன்றும் தொலைவில் இல்லை!' என பதிவிட்டுள்ளார்.
Follow Us