The Chief Minister MK stalin made 4 promises to the people of Tamil Nadu Thiruvalluvar Day
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று (15-01-26) உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி, அதிகாலையில் எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணக்கோலமிட்டு பொங்கலிட்டு சூர்ய பகவானை வழிபாடு செய்தனர்.
இந்த பண்டிகையை தொடர்ந்து இன்று (16-01-26) மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவர்களுக்கு நண்பனாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் போதே திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்.
அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல், வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம். சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல், வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள், இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள், தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us