கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த உத்தரவை பின்பற்றாமல்  கோயில் நிர்வாகம் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது. இதனால் நீதிமன்ற உத்தரவை மீறியதாக,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவு செல்லாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை (12-12-25) அன்று விசாரணைக்கு வந்தது. பின்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, சில நாட்களாக நடந்து வந்த இந்த விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தத் தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'என் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை' என்றும், அதிகாரிகள் என் உத்தரவை மதிக்காதது ஏன் என விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். எனது உத்தரவிற்கு எதிராக திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்திந்திருந்தனர் என்றும் கூறியிருக்கிறார். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாத வண்ணம் உள்ளது.