தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற பெயரில்  சுற்றுப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். முன்னதாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது  ஒரு  மாநிலங்களவை எம்பி இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கி இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அதிமுக தலைமை அதை மறுக்க, அதிருப்தியில் இருந்த பிரேமலதா அதன் காரணமாகவே கூட்டணி முடிவுகளை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பிரேமலதா விஜயகாந்த்தை திடீரென இன்று சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  கே.சி.வீரமணி, 'அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம். மரியாதை நிமித்தமாகவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன். அதிமுகவின் எதிர்கால நன்மைக்காகத்தான் அவரை சந்தித்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை' என தெரிவித்துள்ளார்.

Advertisment