Skip to main content

மருத்துவமனைக்கு உதவ களத்தில் இறங்கிய யூடியூபர்ஸ்..!  தமிழகத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

youtubers on the field to help the hospital

 

தமிழகத்தில் கரோனாவல் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. தினசரி 1,800க்கு குறையாத அளவுக்கு கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது பெரியளவில் பாதிப்பு குறைந்தாலும், இறப்பு என்பது அதிகாரப்பூர்வமாக தினசரி 5 முதல் 10 வரை செல்கிறது. பரப்பளவில் பெரிய மாவட்டமான திருவண்ணாமலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தவிர வேறு பெரிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனை எதுவும் கிடையாது. பெரியளவில் சிகிச்சை பெற வேண்டுமானால் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூரு, வேலூர் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

 

கரோனா காலத்தில் படுக்கை இல்லாமல், குறிப்பாக ஆக்ஸிஜன் படுக்கை இல்லாமல் நோயாளிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். பழைய அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனையாக செயல்படும் மருத்துவமனை ஆகிய இடங்களில் அதிகளவு இடவசதியும் படுக்கைகளும் உள்ளன. அதனால் அங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைக்கலாம் என முடிவு செய்தது திருவண்ணாமலையில் இயங்கும் ரோட்டரி பிரைட் அமைப்பு.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தங்களது கருத்தைக் கூறியுள்ளனர். அவர் தனியார் நிறுவனங்களின் நிதியைத் தருவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இதனை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இதனை அமைத்துத் தர 70 லட்ச ரூபாய் கேட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக சி.எஸ்.ஆர் நிதி, ரோட்டரி பிரைட் அமைப்பின் நிதி ஆகியவற்றை தந்து பணியை தொடங்கச் சொல்லியுள்ளார்கள். மீதி நிதிக்கு என்ன செய்வது என ஆலோசனை நடத்தியுள்ளனர்.

 

ரோட்டரி பிரைட் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியும், ஆக்ஸிஜன் பிளான்ட் அமைக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பரசு, யூடியூபர்கள் வழியாக நிதி பெறலாம் என முடிவு செய்து பேசியுள்ளார்கள். தமிழகத்தின் பிரபலமான யூ-டியூபர்ஸ்களான ஐயன். கார்த்திகேயன், தமிழ்கேள்வி செந்தில்வேலன், பிரசன்னா, ஆவுடையப்பன், மதன், ஹாசிப், குருபாய், மாரீஸ், மைனர், சுமி, நக்கலைட்ஸ், அரவிந்த், விஜய் வரதராஜ், ஜென்ராம், ப்ளாக் ஷீப், ஜென்சன் என 26 யூடியூபர்கள் இணைந்து தமிழ் டிஜிட்டல் கிரியேட்டர் அசோசியேஷன் என்கிற பெயரில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

 

மே 30ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 11 வரையென இடைவிடாமல் 6 மணிநேர நிகழ்வை அனைத்து சேனல்களிலும் லைவ்வாக ஒளிப்பரப்பியது. பறை இசையோடு தொடங்கிய நிகழ்வில், ஏப்பம்பட்டி அணி, பாப்பம்பட்டி அணி என அணிகளாக பிரிந்து நகைச்சுவை நிகழ்ச்சிகள், முக்கிய யூடியூபர்கள் சந்தித்த மனிதர்கள், மறக்க முடியாத நிகழ்வுகள் என பலவற்றைப் பார்வையாளர்கள் சிரிக்க சிரிக்க பகிர்ந்துகொண்டனர்.

 

youtubers on the field to help the hospital

 

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி கலந்துகொண்டு பேசும்போது, “இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியதையும், அதில் நான் கலந்துகொண்டு உரையாற்றுவதும் மகிழ்வாக இருக்கிறது”. என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது பாடல் குறித்தும், ரசிகர்கள் எழுப்பும் கேள்விகள், பாராட்டுகள் குறித்தும் சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியைக் காணும் பார்வையாளர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் அமைக்க நிதி தரலாம் என அதற்கான லிங்க் ஒன்றைப் பகிர்ந்துக்கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடியும்போது 20 லட்ச ரூபாய் நிதி வந்துள்ளது. அதன்பின் தற்போதும் தொடர்ச்சியாக நிதி வந்துகொண்டே இருக்கிறதாம். தற்போதுவரை 22 லட்ச ரூபாய் திரண்டுள்ளதாக கூறுகிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.

 

சில வாரங்களுக்கு முன்பாக இதேபோல் கரோனா நிதி திரட்டல் என இந்தியா முழுவதுமுள்ள யூடியூபர்கள் இணைந்து நடத்திய நிகழ்வில் 50 லட்ச ரூபாய், கேரளா மாநில யூடியூபர்கள் நடத்திய நிகழ்வில் 1 லட்சம் என குறைவாகவே வசூலானது. ஆனால், தமிழகத்தில் நடந்த நிகழ்வில் 22 லட்ச ரூபாய் வந்தது ஒருங்கிணைப்பார்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

நிதி தந்தவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிடும்போது, என் அண்ணன் இறந்தார், என் தாய் இறந்தார், என் தந்தை இறந்தார். ஆக்ஸிஜன் இல்லாமல் இனி யாரும் இறக்ககூடாது என்பதற்காகவே நிதி வழங்குகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அதனை வாசிக்கும்போதே மனம் கலங்கியது. அந்தளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசே எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது. மக்கள், தங்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே சரிசெய்ய முடியும் என நினைப்பதால்தான் நிதி தந்துள்ளார்கள்.

 

அடுத்ததாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக இதேபோன்று ஒரு நிகழ்வு நடத்தலாம் என ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் திரைப் பிரபலங்களையும், இன்னும் அதிக அளவில் யூடியூபர்களையும் கலந்துகொள்ள வைப்பது என முடிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.