Skip to main content

முக்கிய தலைவர்களுக்கு குறி; துப்பாக்கி தயாரித்த வழக்கில் சிக்கிய வாலிபர்கள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

YOUTUBE SALEM DISTRICT YOUTHS NIA INVESTIGATION

 

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கிகளை தயாரித்ததாகப் பிடிபட்ட வாலிபர்கள், அவர்களுடைய சிவகங்கை கூட்டாளி ஆகியோர் தமிழகத்தில் சில முக்கியத் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் காவல்துறை டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் காவல்துறையினர் புளியம்பட்டி பகுதியில் கடந்த மே 19- ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 

 

அந்த வழியாக இரு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அவர்கள் கொண்டு வந்த பையைச் சோதனை நடத்தியதில் அதில் ஒரு கைத்துப்பாக்கி, அரைகுறையாக செய்து முடிக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கி, முகமூடிகள், கையுறைகள், ஒரு லிட்டர் பெட்ரோல் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

விசாரணையில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி சஞ்சய்பிரகாஷ் (வயது 25), எருமாபாளையம் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (வயது 25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 

 

செட்டிச்சாவடி பகுதியில் அவர்கள் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து வெல்டிங் இயந்திரம், துப்பாக்கி தயாரிப்புக்கான மரக்கட்டைகள், ஏராளமான முகமூடிகள், வீச்சரிவாள், சூரிக்கத்திகள், ரம்பம், அரம் மற்றும் ஈழப்போராளி பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன், தென்னாப்பிரிக்கா நாட்டு போராளி தாமஸ் சங்காரா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலன் என்ற வாலிபரையும் பின்னர் கைது செய்தனர். சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரித்ததால், இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் கோகிலா தலைமையில் காவல்துறையினர், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். 

 

அவர்களுக்கு பெரிய அளவில் பின்னணி ஏதும் இல்லை என்பதும், இயற்கையையும் கனிம வளங்களையும் சுரண்டும் நபர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பில் புதிய இயக்கத்தை கட்டமைக்க திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. எனினும், இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. காவல்துறையும் களத்தில் இறங்கியது. என்ஐஏ அதிகாரிகள், கடந்த ஜூலை 27- ஆம் தேதி பூர்வாங்க விசாரணையை தொடங்கினர். 

YOUTUBE SALEM DISTRICT YOUTHS NIA INVESTIGATION

 

நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகிய இருவரையும் கடந்த ஆகஸ்ட் 7- ஆம் தேதி காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர். அதன்பிறகு இந்த சம்பவத்தில் மேலும் முன்னேற்றம் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர். இந்நிலையில் என்ஐஏ காவல்துறையினர் மீண்டும் வெள்ளிக்கிழமை (அக். 7) செட்டிச்சாவடியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.

 

அவர்கள் இருவருடனும் தொடர்பில் இருந்த சிவகங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டிலும், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், கணினி பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள், புத்தகங்கள், பிரபாகரனின் படங்கள், துப்பாக்கி தயாரிப்புக்கான உப பொருள்களை வாங்கியதற்கான ரசீதுகள், வெடி மருந்துகள், விஷ மருந்து தயாரிப்பதற்காக சேகரித்து வைத்திருந்த விஷ விதைகள், வனப்பகுதிக்குள் செட் போடுவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். 

 

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சேலத்தில் கைது செய்யப்பட்ட நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ், சிவகங்கையைச் சேர்ந்த அவர்களுடைய கூட்டாளி விக்னேஷ்வரன் ஆகியோர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், சில முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி இருந்ததும் தெரிய வந்தது. அவர்களை குறிவைத்து வெடி மருந்துகள், வெடி பொருள்கள் தயாரித்து வந்துள்ளனர். 

 

சிவகங்கையில் நடந்த சோதனையில் துப்பாக்கிகள், சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்களை கைப்பற்றியுள்ளோம். இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரையும் விசாரித்து வருகிறோம்,'' என்றனர். 

 

விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள வாலிபர்கள், தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு குறி வைத்து செயல்பட்டு வந்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.