Skip to main content

ரிக் தொழிலாளி அடித்து கொலை; உடலில் கல்லைக் கட்டி குட்டையில் வீசிச் சென்ற நண்பர்கள்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

youths who incident their friend and threw it in a puddle

 

திருச்செங்கோடு அருகே குடிபோதையில் நண்பன் என்றும் பாராமல் ரிக் தொழிலாளியை அடித்துக் கொன்ற 5 நண்பர்கள், உடலில் கல்லைக்கட்டி குட்டையில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மண்டகபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜசேகர் (24). ரிக் லாரி தொழிலாளி. இவர், ஜூலை 2ம் தேதி இரவு, கிரிவலப்பாதையில் உள்ள மலார்குட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு ஆலமரத்தின் கீழே அவருடைய நண்பர்கள் 5 பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராஜசேகரைப் பார்த்த நண்பர்களுள் ஒருவரான விக்னேஷ் அவரையும் மது குடிக்க அழைத்தார். அங்கு சென்ற ராஜசேகர் அவர்களிடம்  சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.     

 

அப்போது ராஜசேகரை அவருடைய நண்பர்கள் நான்கு பேர் கை, கால்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டனர். விக்னேஷ், அங்கிருந்த கல்லை எடுத்து ராஜசேகர் தலை மீது போட்டு கொலை செய்துள்ளார். ஆத்திரம் தணியாத மற்ற நண்பர்களும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிகழ்விடத்திலேயே ராஜசேகர் உயிரிழந்தார். ராஜசேகர் இறந்துவிட்டதை உறுதி செய்த கொலையாளிகள், அவருடைய உடலில் கல்லை கட்டி அந்தப் பகுதியில் உள்ள மலார் குட்டையில் சடலத்தை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.  

 

மறுநாள் காலையில் போதை தெளிந்த 5 பேரும் நண்பனை கொன்று விட்டோமே என வருந்தியதுடன், அனைவரும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர், மலார் குட்டையில் கிடந்த ராஜசேகரின் சடலத்தை மீட்டனர். சடலத்தை உடற்கூராய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்நிலையத்தில் சரணடைந்த மலார்குட்டையைச் சேர்ந்த லிங்கப்பன் மகன் விக்னேஷ் (27), கோபால் மகன் பெரியசாமி (25), செல்வம் மகன்  தினேஷ்குமார் (25), முருகேசன் மகன் பூவரசன் (23), சண்முகம் மகன் பிரவீன் (23) ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  

 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூரில் பிள்ளையார் சிலை வைப்பது தொடர்பாக ராஜசேகருக்கும், விக்னேஷ் தரப்புக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டு நண்பன் என்றும் பாராமல் ராஜசேகரை கொலை செய்திருப்பதும், அவர்கள் அனைவருமே சிறு வயது முதலே நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது.  இதையடுத்து அவர்களை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலையாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.