Skip to main content

 மனைவியை மீட்டுத்தரக் கோரி இளைஞர் தீக்குளிக்க முயற்சி.! தேனி எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
theni

 

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால், எஸ்.பி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயற்சி செய்த மணிகண்டன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

இந்நிலையில், மணிகண்டனிடம் (27) பேசிய போது, "மார்கண்டேயன்கோட்டை தான் எனது சொந்த ஊர். என் தெருவைச் சேர்ந்த பத்மசுருதி (22) என்ற பெண்ணை காதலித்து ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் திருமணம் செய்துகொண்டது என் மனைவியின் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. ஆரம்பம் முதலே எங்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் என் மனைவியை அவரது வீட்டார்கள் அழைத்துச்சென்றனர்.

 

அப்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரைக் கூட்பிடச்சென்றேன். என்னுடன் பிரச்சனை செய்து என் மனைவியை என்னுடன் அனுப்ப மறுத்துவிட்டனர். போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தும் பயனில்லை. என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்துவிட்டனர். என் அனுமதி இல்லாமல் இப்படி செய்துவிட்டதாக  மீண்டும் போலீசில் புகார் கொடுக்க சென்றும் என் புகாரை ஏற்கவில்லை. என் மனைவியை அவர்கள் குடும்பத்தாரே அடித்து துன்புறுத்துகின்றனர். அவர்களிடம் இருந்து என் மனைவியை மீட்க வேறு வழி தெரியாமல் இன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். என் மனைவிக்கு தற்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை" என்று சொல்லி கண்ணீர்விட்டார். மணிகண்டனை தேனி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர் போலீசார்.

சார்ந்த செய்திகள்