Skip to main content

கால் வழுக்கி பாறையிலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு...

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

youth slipped from rock passed away

 

திருப்பத்தூர் மாவட்டம், அம்பலூர் அருகேயுள்ள நைனாகவுண்டர்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. விவசாயத் தொழிலாளியான இவரின் 22 வயது மகன் அஜய், வாணியம்பாடியில் உள்ள வாணி பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

 

பொங்கல் திருவிழாவிற்கு கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி உமாபதி வீட்டுக்கு ஜனவரி 13 ஆம் தேதி வந்துள்ளார் அஜய். தை பொங்கலன்று காலை 08.30 பணிக்கு நெக்னாமலை தண்ணி பாறை முருகர் கோயில் அருகே குளிப்பதற்காக 13 வயதான தனது சித்தி மகன் சந்தோஷ் என்பவருடன் சென்றுள்ளார். அப்போது பாறை மீது ஏறும்போது கால் வழுக்கி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அஜய்யின் வலதுபக்க தலையில் காயம்பட்டு தண்ணீரில் விழுந்துள்ளார்.

 

தலையில் அடிப்பட்ட காயம், சுயநினைவில்லாதது போன்றவற்றால் தண்ணீரில் மூழ்கியுள்ளார் அஜய். இதனைப்பார்த்து அந்த சிறுவன் அருகிலுள்ள பகுதிக்கு ஓடிச்சென்று உதவிக்காக ஆட்களை அழைத்துள்ளார். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவருவதற்குள் அஜய் தண்ணீரில் மூழ்கியுள்ளார். பொதுமக்கள் வந்து தண்ணீருக்கடியில் இருந்து அஜய்யை இழுத்து பாறை மீது போட்டுள்ளனர். அப்போது, நீரில் மூழ்கி மூச்சு விடமுடியாமல் அஜய் இறந்துள்ளார். 

 

இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்