Skip to main content

உறவுக்கார சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்த இளைஞர்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

Child case youth prison

 

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மணச்சனப்பட்டியைச் சேர்ந்தவர் கலாராணி. இவரது மகள் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்க சிறுமியை அவரின் அத்தை வீடு அமைந்துள்ள புரசம்பட்டிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். அங்கிருந்து திருச்சி மேலப்புதூரிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார். சிறுமியின் அத்தை மகனும், JCB ஆப்பரேட்டருமான சேகர், 2018ம் ஆண்டு சிறுமியின் பிறந்த நாள் அன்று பரிசுப் பொருட்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி திருச்சி அழைத்துச் சென்று பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். பிறகு புரசம்பட்டிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

 

பின்னர், சேகர் வேலைக்காக மலேசியா செல்ல இருப்பதாகச் சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால், சிறுமி அங்கு வேலைக்குச் சென்று வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் நான் என்ன செய்வது எனக் கேட்டதற்காகக் கடந்த 02.04.2018 அன்று காலை 11 மணியளவில் சின்னப்பனையூரில் உள்ள விநாயகர் கோவிலுக்குக் கடத்திச் சென்று 13 வயதே நிரம்பிய சிறுமியை திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு, சிறுமியிடம்  திருமண வயது வந்தவுடன் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் எனக் கூறி கட்டிய தாலியைக் கழட்டி வாங்கி வைத்துக் கொண்டார். மலேசியா சென்றுவிட்டுக் கடந்த 2020 அன்று ஊர் திரும்பிய சேகர், சிறுமியிடம் நான் தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேனே எனக் கூறி கட்டாயப்படுத்தி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு ஈரோட்டிற்கு வேலைக்காகச் செல்வதாகக் கூறி சிறுமியைக் கடந்த 10.11.2021 அன்று அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டுச் சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 11.11.2021 அன்று சேகர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

 

இது தொடர்பாகத் தகவல் சிறுமிக்கு 17.11.2021 தெரியவந்துள்ளது. அதனையடுத்து சேகர் திருமணம் செய்து கொண்டது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்டவற்றை தன் தாயிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சேகர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கடத்திக் கொண்டு போய் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்து கொண்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி சேகரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.