Skip to main content

மகனை கொன்றவரை கூலிப்படை வைத்து கொன்ற தந்தை!

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

youth passes away police arrested four in hosur
திலக்

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த குருபட்டி கிராமத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. இந்தப் போட்டியின்போது குருபட்டியைச் சேர்ந்த மோகன்பாபு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திலக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் மோகன்பாவுவை திலக் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலையில் திலக்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

youth passes away police arrested four in hosur
திம்மராயப்பா

 

சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த திலக் மோகன்பாபுவின் தந்தையான திம்மராயப்பாவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திகிரி போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், கடந்த 12ம் தேதி அன்று ஓசூர் பெரியார் நகரில் உள்ள டீக்கடையில் திலக் டீ குடித்துக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திலக்கை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பித்தனர்.

 

திலக் ஏற்கனவே திம்மராயப்பாவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திகிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மாவட்ட எஸ்.பி. உடனடியாக மத்திகிரி இன்ஸ்பெக்டர் சாவித்திரி, எஸ்.ஐ. சிற்றரசு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

 

youth passes away police arrested four in hosur

 

இந்த கொலை தொடர்பாக ஓசூர் நகர போலீஸார் திம்மராயப்பாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மகனை கொலை செய்தவரை கூலிப்படை வைத்து தீர்த்து கட்டியது தெரியவந்தது. மேலும், திம்மராயப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ஒரே மகனை கொலை செய்துவிட்டு கொலையாளி வெளியே சுற்றியதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கூலிப்படையைச் சேர்ந்த பலரை நாடினேன். ஆனால், அனைவரும் மறுத்துவிட்டார்கள்.

 

பிறகு மத்திகிரியைச் சேர்ந்த ஜிம் டிரெய்னர் சசிகுமார் என்பவரை தொடர்புகொண்டு 20 லட்சம் ரூபாய் விலைபேசி முன்பணமாக 2 லட்சம் ரூபாயை வழங்கினேன். சசிகுமார் என் உறவினர். அவர் மூலம் எனது உறவினர்களான சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோரைக் கொண்டு திலக்கை கொலை செய்ய முடிவு செய்தோம்.சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் திலக்கை ஒரு மாதமாக பின்தொடர்ந்து வழக்கமாக அவர் தினமும் டீ குடிக்கும் டீக்கடையில் திட்டமிட்டபடி கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்தனர்” என ஒப்புக்கொண்டுள்ளார்.

 

youth passes away police arrested four in hosur
சிவக்குமார்

 

இந்த கொலை வழக்கில் திம்மராயப்பா, சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய மூவரை ஓசூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர். ஜிம் டிரெய்னரான சசிகுமாரை தேடிவந்த நிலையில், சங்ககிரி நீதிமன்றத்தில் சசிகுமார் சரணடைந்துள்ளார். திம்மராயப்பா உள்ளிட்ட கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.