Skip to main content

ஊரடங்கில் வீட்டில் முடங்காமல் சுற்றியதால் இளைஞர் பலி... கதறும் குடும்பத்தார்..

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

youth passes away near thirupattur

கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி நண்பர்களுடன் வெளியே சென்ற இளைஞர் பலியாகியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கம்பிக்கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ் அஹமத். 29 வயதான இம்தியாஸ், மே 26ஆம் தேதி காலை தனது நண்பர்களுடன் ஆணைமடுகு தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழையால் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக இருந்தது. மேலிருந்து தண்ணீரில் குதித்து நீந்திக்கொண்டு விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

 

இம்தியாஸ் மேலிருந்து குதிக்கும்போது தடுப்பணையின் தரையில் இருந்த சகதியில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலே வர முடியாமல் நீரில் மூழ்கியுள்ளார். நீருக்குள் குதித்தவர் நீண்ட நேரமாக மேலே வராததால் நண்பர்கள் நீரில் மூழ்கி நாற்புறமும் தேடியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

 

அதன்பின் ஆம்பூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கூற, தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் தடுப்பணையில் நீந்திச் சென்று, 2 மணி நேர தேடுதலில் இம்தியாஸ் உயிரற்ற உடலை மேலே கொண்டுவந்தனர். இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

இம்தியாஸ்க்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்தாரும், உறவிர்களும் அழுத அழுகை மற்றவர்களையும் கலங்கச் செய்தது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என அறிவுரை கூறி அங்கு வந்த இளைஞர்களை அனுப்பிவைத்தனர் காவல்துறையினர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.