Skip to main content

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடிய இளைஞர் திடீர் மரணம்! - ஆந்திராவில் சோகம்! 

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Youth passes away in ganesh chadhurthy celebration

 

ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மண்டபத்தில் நண்பர்களுடன்  டான்ஸ் ஆடிக்கொண்டே சுருண்டு விழுந்த 26 வயது இளைஞர் இறந்து போனார். நவீன மருத்துவத் தொழில்நுட்பம் வந்தபிறகு அனைத்து நோய்களும் குணமாகி வருகின்றன. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் வயது வித்தியாசமின்றி இளம் வயதிலேயே இதய செயலிழப்பால் பலரும் இறக்கின்றனர். அதனால், இரவில் தூங்குபவர் காலையில் எழுந்திருப்பாரா?  இல்லையா?  என்ற சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது. ஏனென்றால், அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம்,  துரித உணவுப் பழக்கம், நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் மரணம் எப்போது நிகழும் என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொருபுறம் ஆடலும் பாடலுமாக மகிழ்ச்சியில் திளைப்பவர்கள், அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் சமீப காலமாக நடந்து வருகின்றன.  

 

ஆந்திர மாநிலம் - ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் - தர்மவரம் மண்டலம் - மாருதி நகர் பகுதியில் விநாயக மண்டபம் அமைத்து அதில் விநாயகர் சிலை வைத்து கடந்த மூன்று தினங்களாக அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர். நேற்று இரவு இந்த விநாயகர் மண்டபம் முன்பு சினிமா பாடல்களுக்கு  இளைஞர்கள் நடனமாடினர். அப்பகுதி மக்கள் கைகளைத் தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர். இதில் 26 வயதான பிரசாத் என்ற இளைஞர் நடனம் ஆடிக்கொண்டே சுருண்டு விழுந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரசாத்தை சோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்