Skip to main content

காதலனைக் கொலை செய்த தந்தை ; உடந்தையாக இருந்த மகள்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

youth passed away in thanjavur father and daughter arrested by police

 

தஞ்சாவூர் மாவட்டம் அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருடைய இளைய மகன் சக்திவேல் (23). இவர் அந்த பகுதியில் தனியார் பால் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனிடையே கடந்த 6ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த சக்திவேலின் சகோதரர் சரவணன் வல்லம் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 

இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி அம்மாபேட்டை அருகே இராராமுத்திரைக்கோட்டை பகுதியில் உள்ள நெய்வாசல் வாய்காலில் சக்திவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இதனிடையே, கடந்த 13 ஆம் தேதி பாலகுரு என்பவர் சக்திவேலுவை கொலை செய்தது நான் தான் என்று வல்லம்புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அதன் பின்பு அவர் வல்லம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாலகுருவிடம் காவல்துறையினர் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அந்த விசாரணையில், சக்திவேலும் அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுருவின் மகள் திவ்யா (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்களது காதலுக்கு பாலகுரு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்ததால், சக்திவேலை கொலை செய்ய பாலகுரு திட்டமிட்டார்.

 

இது குறித்து செங்கிப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் டீக்கடைக்காரர் சத்யாவை அணுகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, பாலகுரு மற்றும் சத்யா ஆகிய இருவரும் மதுரையில் இருந்து கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளனர். சக்திவேல் பாலகுருவிடம் அடிக்கடி நிலம் விற்பனை சம்மந்தமாக பேசுவது வழக்கம். இதனால்,  நிலம் விற்பனை குறித்து பேச வேண்டும் எனக் கூறி சக்திவேலுவை திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு கடந்த 6ஆம் தேதி பாலகுரு வரவழைத்துள்ளார். அப்போது அந்த இடத்தில் மறைந்து இருந்த மதுரை கூலிப்படையினர் 3 பேர் அங்கு வந்த சக்திவேலுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இதற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன் மற்றும் அவரது வேலையாள் கதிர்வேல் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் சக்திவேலுவின் உடலையும், அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் வேறொரு வாகனத்தில் ஏற்றிச் சென்று குருவாடிப்பட்டி பகுதியில் உள்ள ஆற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சக்திவேலுவை கொலை செய்ய பாலகுரு திட்டமிட்டது அவரது மகள் திவ்யாவுக்கு தெரிந்தும், அதை அவர் மறைத்துள்ளார். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் பாலகுருவிடம் பணம் வாங்குவதற்காக அந்தப் பகுதிக்கு நேற்று வந்துள்ளனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு சென்று கூலிப்படையைச் சேர்ந்த கிரிவாசன்( 45), சந்தோஷ்குமார் (44), கார்த்தி (35) ஆகிய மூன்று பேரையும் மடக்கிப் பிடித்தனர். மேலும், பாலகுரு, சத்யா, துரைமுருகன், திவ்யா, கதிர்வேல், மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 3 மூன்று பேர் ஆகிய 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தஞ்சை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அதன் பின்னர், தேவிகா திருச்சி சிறையிலும் மற்ற 7 பேர் புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.