Skip to main content

காதல் மோதலில் கொலை? - உறவினர்கள் மறியலால் பரபரப்பு

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

youth passed away relatives involved in strike

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ளது முன்னூரான்காடுவெட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பட்டுசாமி-கம்சலை தம்பதியரின் 19 வயது மகன் அழகேசன். இவரது தாய் தந்தை இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். அதன் பிறகு, தாய் தந்தையை இழந்த அழகேசனை அவரது பெரியம்மா கௌசல்யா தனது வீட்டிற்கு அழைத்து வந்து தன் பிள்ளையைப்போல வளர்த்து பி.இ. சிவில் படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அழகேசன் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

 

இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அதே பகுதியில் உள்ள ஆசனேரி தண்ணீரில் அழகேசன் பிணமாக மிதந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த அவரது உறவினர்கள், ஊர்மக்கள் அழகேசன் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதே போல் அழகேசன் காதலித்த அதே பெண்ணை மற்றொரு வாலிபர் காதலித்து வந்தததால் அவர்தான் அழகேசனை கொலை செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இருவருக்கு இடையே காதல் மோதல் இருந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். எனவே இந்தக் கொலைக்கு காரணமான அந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரி விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

 

இந்தத் தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், ஆண்டிமடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதோடு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் அழகேசன் காதலித்த பெண்ணை போட்டி போட்டு காதலித்த மற்றொரு இளைஞரைக் கைது செய்தால்தான் மறியலைக் கைவிடுவோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சந்தேகத்தின் பெயரில் அந்த இளைஞரைக் கைது செய்ய முடியாது எனத் தெரிவித்தனர்.  

 

அதே போல் இறந்துபோன அழகேசனின் பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறுதலாக தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தாரா என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சாலை மறியலைக் கைவிட வேண்டும் இல்லையேல் உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்று காவல்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து அழகேசனின் உறவினர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.