திருச்சி, கிராப்பட்டி காலனி பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சின்னதுரை ரவிக்குமார் (44). இவர் கடந்த 24ஆம் தேதி இரவு சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தன்னுடைய நண்பர் பிரதீப் குமார் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு நேற்று காலை மது அருந்துவதற்காக முடுக்கப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். மது அருந்திக் கொண்டிருந்த போது சின்னதுரை ரவிக்குமாருக்கும் டி.வி.எஸ். டோல்கேட் முடுக்கப்பட்டியைச் சேர்ந்த தர்மன் என்கிற தர்மராஜ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் எழுந்துள்ளது.
இதையடுத்து தர்மன் மற்றும் அவருடன் வந்திருந்த சரவணன், பிரசன்னா ஆகிய மூன்று பேரும் சின்னதுரையுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தர்மன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சின்னதுரையின் தலையில் அடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சின்னதுரையை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கண்டோன்மெண்ட் காவல்துறையினர் தர்மனை கைது செய்தனர். மேலும் சரவணன், பிரசன்னா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.