Skip to main content

பெண் கொடுக்க காதலியின் பெற்றோர் மறுப்பு; விரக்தியில் ஓடும் ரயில் முன்பு  பாய்ந்து இளைஞர் தற்கொலை! 

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Youth passed away in namakkal

 

காதலியின் பெற்றோர், திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுத்ததால் விரக்தி அடைந்த இளைஞர், ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் விஜயன் (22). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர், உள்ளூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கும் இவர் மீது காதல் இருந்துள்ளது. பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்ட காதலி, தன் பெற்றோரிடம் நேரில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார்.

 

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரிடம் சென்று, திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டுள்ளார். அதற்கு காதலியின் பெற்றோர் மறுத்து விட்டதோடு, அவரையும் கண்ணியக்குறைவாக பேசியிருக்கிறார்கள். இது தொடர்பாக விஜயன் பெற்றோருக்கும், காதலியின் பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்ணின் பெற்றோர், இனி தன் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டோம்; வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விஜயன், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். 

 

இதையடுத்து அவர், மார்ச் 24ம் தேதி நள்ளிரவு, சேலம் - கரூர் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில் மோதியதில் அவருடைய உடல் இரு துண்டுகளாக சிதறியது. சேலம் ரயில்வே காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் விஜயனின் உறவினர்கள் புதன்சந்தை - சேந்தமங்கலம் சாலையில் அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விஜயனின் சாவுக்கு பெண் வீட்டார்தான் காரணம் என்றும், அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கூறி மறியலில் ஈடுபட்டனர். 


இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ், சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


சடலத்தின் உடற்கூராய்வு அறிக்கை கிடைத்தபிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு சமாதானம் அடைந்த விஜயனின் உறவினர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தற்கொலை சம்பவமும், அதைத் தொடர்ந்த சாலை மறியல் போராட்டமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.