காதல் பிரச்சனை? - கொலை செய்து உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்

Youth passed away due to love problems

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் மகிழன்(17 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியில் சென்ற மகிழன் இரவு வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து அவரது தந்தை இளையபெருமாள், மகன் காணவில்லை என்று3 ஆம் தேதி சோழத்தரம்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் பேரூர் அருகே உள்ள குறிஞ்சிகுடி கிராமத்தில் உள்ள பாஸ்கர் என்பவரது கிணற்றுக்கு அருகே மகிழனின் செல்போன் கிடந்துள்ளது. இதனைக் கைப்பற்றிய போலீஸார், விசாரணை செய்து கொண்டிருந்தபோது கிணற்றில் ஒரு பொருள் கிடப்பதுபோல தெரிந்துள்ளது. போலீஸார் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி தேடிப்பார்த்தபோதுஒரு உடல் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் கல்லைக் கட்டிப் போட்டிருப்பதும் தெரிய வந்தது.

உடலைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அது மகிழன் என்பது தெரிய வந்தது. போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காதல் பிரச்சனையால் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Cuddalore love police
இதையும் படியுங்கள்
Subscribe