Skip to main content

'இப்படி இருந்தா எப்படிங்க எடுக்குறது...' - வடிவேலு பட பாணியில் அரிசி மூட்டையை திருடிய இளைஞர் 

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

youth has stolenbag of rice style of Vadivelu film Kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கச்சராபாளையம் பஸ் நிலையம் அருகில் அரிசி மற்றும் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கொளஞ்சியின் கடைக்கு வந்துள்ளார். அவர் கொளஞ்சியிடம் தங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்க உள்ளது அதற்கு சுமார் ரூ.20,000 மதிப்பில் மளிகை பொருட்களும், அரிசி மூட்டைகளும் வேண்டும் என்று வாங்குவதற்கான பொருட்களின் விபரப் பட்டியலையும் கொடுத்துள்ளார். இன்று பெரிய வியாபாரம் கிடைத்திருக்கு என்ற மகிழ்ச்சியில் மளமளவென அந்த இளைஞர் கொடுத்த பட்டியலில் உள்ள மளிகை பொருட்களைச் சேகரித்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டினார். அதோடு அந்த இளைஞர் சமையலுக்குத் தேவையான 3 அரிசி மூட்டைகளையும் எடுத்து வைத்தார். முதலில் சமைப்பதற்கு அரிசி தேவைப்படுகிறது. அதனால் இந்த மூன்று மூட்டை அரிசிகளையும் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பணத்துடன் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

 

அதன்படி மூன்று மூட்டை அரிசியையும் அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு பணத்தோடு இளைஞர் வருவார் என்று கொளஞ்சி காத்திருந்தார். ஆனால் நேரம் போனதே தவிர அந்த இளைஞர் வரவில்லை. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட கொளஞ்சி, வேதனையில் இருந்து வந்திருக்கிறார்.

 

இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சி தனது ஊரான மாதவச்சேரியிலிருந்து கடையைத் திறப்பதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்று ஏமாற்றிய இளைஞர் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். சுதாரித்துக் கொண்ட கொளஞ்சி தனது இருசக்கர வாகனத்தைக் குறுக்கே நிறுத்தி அந்த இளைஞரை வழிமறித்து அவ்வழியாக சென்றவர்களின் உதவியோடு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கச்சராபாளையம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று புகார் கொடுத்துள்ளார். 

 

அதன்பேரில் விசாரணை நடந்திய போலீசார்,  கொளஞ்சியைப் போன்று அதே பகுதியில் உள்ள இன்னொரு அரிசிக் கடை உரிமையாளர் திருமலை என்பவரிடம் அரிசி மூட்டைகளை ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும், இளைஞரிடம் விசாரித்ததில் இதுபோன்று சிலரிடம் அரிசி மூட்டைகளை ஏமாற்றி திருடி இருப்பதாகப் பட்டியல் போட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

திரைப்படங்களில் நகைச்சுவையில் கலக்கும் நடிகர் வடிவேலு ஒரு படத்தில், முதலாளி  250 மூட்டை அரிசி தேவைப்படுகிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மூட்டையிலும் சாம்பிள் அரிசி வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு கடைக்காரரை ஏமாற்றிச் செல்வது போல் அமைந்திருக்கும். மற்றுமொரு காமெடியில் என் மனைவி அரிசி வாங்கிட்டு வரச் சொன்னாள் ஆனால் அரிசி பெயரை மறந்துட்டேன். ஒவ்வொரு அரிசியா எடுங்க நான் சாப்பிட்டு பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி, கடைக்காரரை ஏமாற்றி தராசு படிக்கற்களை திருடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதே பாணியில் கச்சராபாளையம் பகுதியில் ஒரு இளைஞர் கடைக்காரர்களிடம் மூட்டை மூட்டையாக அரிசியை ஆட்டையைப் போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.