கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில், தொடர் மழையின் காரணமாகஅங்குள்ளஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 17 வயது மகனான,தேஜா என்பவர், ஏரிக்கு குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஏரியில் தேஜா மூழ்கியுள்ளார்.
இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அக்கிராம இளைஞர்கள் ஏரியில் இறங்கித் தேடினர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தேஜாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல்,பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஏரியில் மூழ்கிய சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.