குடும்பத்தினருடன் வாலிபர் தர்ணா போராட்டம்!

 Youth dharna struggle  with family!

விழுப்புரம் மாவட்டம், வேட்டப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(34). கடந்த மாதம் 12ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், ஏ.கே குச்சிபாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் காரில் செல்லும் போது பிரபாகரன் வளர்த்து வந்த நாய் மீது கார் மோதி நாய் உயிரிழந்தது. இதனால் பிரபாகரன் நந்தகுமார் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அன்று மாலையே நந்தகுமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பிரபாகரன் வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து பிரபாகரனின் உறவினர் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் பிரபாகரனை தாக்கிய நந்தகுமார், நவீன், ஜெயமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் நந்தகுமார் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் கைது செய்யக்கோரி பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு அமர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் நந்தகுமார் தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் குடும்பத்தினர் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

police villupuram
இதையும் படியுங்கள்
Subscribe