Skip to main content

பெட்ரோல் பங்கில் மோசடி; அளவைக் குறைக்கும் ஊழியர்கள் - இளைஞர் பரபரப்பு புகார்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

youth complained that quantity petrol was being supplied petrol station

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மர். விவசாயத் தொழில் செய்துவரும் இவர், அதே கடையநல்லூர் பகுதியில் பாஜகவின் ஒன்றிய தலைவராகவும் இருந்து வருகிறார். தர்மர் கடந்த திங்கட்கிழமையன்று தனது வயலுக்குச் செல்லும்போது  புன்னையாபுரத்தில் உள்ள ஐஓசி பெட்ரோல் பங்கில் 311 ரூபாய் பணம் கொடுத்து  தனது டூவீலரில் 3 லிட்டர் பெட்ரோல் போட்டுள்ளார்.

 

இதையடுத்து, பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற தர்மரின் டூவீலர் திடீரென  ரிசர்வ் ஆகியுள்ளது. குழப்பமடைந்த தர்மர் திரும்ப பெட்ரோல் பங்கிற்கே சென்று பெட்ரோல் குறைவாக அடித்துள்ளதாக அந்த பங்கின் உரிமையாளரிடம் புகார் அளித்தார். அதன்பிறகு, வண்டியிலிருந்த பெட்ரோலை அளந்து பார்த்தபோது ஒன்றரை லிட்டர் பெட்ரோல்தான் இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த தர்மர் செல்போன் மூலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

 

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முன்னிலையில் வாளியில் பெட்ரோல் வாங்கி அளந்து பார்த்தபோது  3 லிட்டருக்கு பதில் 2.5 லிட்டர் மட்டுமே இருந்துள்ளது. அப்போது  பெட்ரோல் அளவைக் குறைத்து வாடிக்கையாளர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து பங்கின் உரிமையாளர், தர்மரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தர்மர் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்கனவே மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் பங்கில் இத்தகைய மோசடிகள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் நாள்தோறும் பொதுமக்களின் பணம் கோடிக்கணக்கில் ஏமாற்றப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘உன் நாய் எனக்கு வேண்டாம்!’ - ஒரு மாதம் கழித்து திருப்பிக் கொடுத்தவருக்கு கத்திக் குத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
person who bought the dog and returned it after a month was stabbed

சாத்தூர் வட்டம் – புல்வாய்பட்டி கிராமத்தில் செல்லத்துரையும் அவருடைய  மனைவி முத்துலட்சுமியும் சொந்தமாக ஆடு மேய்த்துப் பிழைத்து வருகிறார்கள். அதே கிராமத்தில், கூலி வேலை பார்க்கும் வெங்கல கருப்பசாமி, மனைவி மாரீஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். செல்லத்துரையிடம் ரூ. 5000 விலை பேசி, ஒரு மாதம் கழித்துப் பணம் தருவதாகக் கூறி வேட்டை நாய் ஒன்றை வாங்கினார் வெங்கல கருப்பசாமி.

ஒருமாதம் கழித்து “எனக்கு இந்த நாய் வேண்டாம்..” என்று திருப்பிக் கொடுத்தபோது, வாங்க மறுத்திருக்கிறார் செல்லத்துரை. அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “நாயைத்  திருப்பியா கொடுக்கிற?” என்று ஆவேசமான செல்லத்துரை, வெங்கல கருப்பசாமியை கத்தியால் குத்தியிருக்கிறார். முதலில் ஏழாயிரம் பண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வெங்கல கருப்பசாமி. அவர் அளித்த புகாரின் பேரில், செல்லத்துரை மீது சாத்தூர் தாலுகா காவல்நிலையம் வழக்குப் பதிவு  செய்துள்ளது.

அதே சாத்தூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மனைவி முத்துலட்சுமி வெங்கல கருப்பசாமி மீது ஒரு புகாரளித்துள்ளார். அதில், தன் கணவர் செல்லத்துரையை வழிமறித்து கத்தியால் குத்த வெங்கல கருப்பசாமி  முயன்றபோது, அந்தக் கத்தியை தான் பிடுங்கியதாகவும், அப்போது தன்னை மார்பிலும் கழுத்திலும் வெங்கல கருப்பசாமி அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெங்கல கருப்பசாமி மீதும் சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.