
மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டத்தில் தவணை தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் லஞ்சம் கேட்ட பணி பார்வையாளர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுதகுடி கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இளைஞர் மணிகண்டன் என்பவர் வீடு ஒன்றை கட்டி வந்தார். பல்வேறு தவணைகளாக தொகையை பெற்று வீடு கட்டப்படும் நிலையில் திட்டத்தின் இரண்டாவது தவணை தொகையை விடுவிக்க நன்னிலம் ஒன்றிய பணி பார்வையாளர் மகேஸ்வரன் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், பணத்தைக் கொடுத்தும் இரண்டாவது தவணை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியிலிருந்த இளைஞர் மணிகண்டன் விஷம் குடித்து வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இளைஞர் மணிகண்டன் உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மணிகண்டன் இறந்ததையடுத்து லஞ்சம் கேட்ட மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவு பிறப்பித்திருந்தார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தவணைத் தொகையை கொடுக்க லஞ்சம் கேட்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் லஞ்சம் கேட்ட மகேஸ்வரன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடிவந்தனர்.திருவாரூர் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் இரண்டு தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில் போலீசார் மகேஸ்வரனை தற்போது கைது செய்துள்ளனர்.
Follow Us