Skip to main content

இளம் பெண் கர்ப்பம்! போக்ஸோவில் கைதான சித்தப்பா! 

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Youth arrested in pocso in tiruttani

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்குட்பட்ட ஒரு ஊராட்சியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின், 17 வயது மகள், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டுவருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பாததால் பதறிய அவரது பெற்றோர், அவர்களது உறவினர்கள் வீடு உட்பட பல்வேறு இடங்களில் இளம் பெண்ணை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இளம் பெண் காணவில்லை என புகாரை பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் அந்த இளம் பெண் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்தத் தகவலைத் தொடர்ந்து திருத்தணி காவல்துறையினர் சித்தூருக்கு விரைந்தனர். அவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்த பகுதிக்கு சென்று சோதனையிட்டபோது, அங்கு அந்தப் பெண்ணும் ஒரு இளைஞரும் இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் திருத்தணி காவல்நிலையத்திற்கு அழைத்துவந்த போலீஸார், அந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் 17 வயது இளம் பெண், “திருத்தணி அருகில் உள்ள வி.கே.என் கண்டிகை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (29), என்னை காதலிப்பதாக கூறினார். நானும் அவரை காதலித்தேன். பிறகு பாலாஜி, என்னை பள்ளிப்பட்டு வட்டம், கரிபேடு முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இருந்தோம். அந்த சமயத்தில், என்னிடம் பாலாஜி வலுக்கட்டாயமாக பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டார். இதனால் நான் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பாலாஜி குறித்து போலீஸார் விசாரித்தபோது, அவர் அந்தப் பெண்ணுக்கு சித்தப்பா முறை வருவது தெரியவந்தது. 

முதலில் மிஸிங்க் கேஸாக போலீஸார் பதிவு செய்திருந்த நிலையில், இளம் பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பாலாஜி மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலாஜி, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.