Skip to main content

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Youth arrested in Pocso for misbehaving with 9-year-old girl

 

குடிபோதையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு அருகே உள்ள மேவலூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர், மரத்தை வைத்து உபகரணங்கள் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ். 23 வயதான இவர், 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு அங்குள்ள தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான ராஜேஷ், சரியாக வேலைக்கு செல்லாமல் ஆங்காங்கே சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதையறிந்த ராஜேஷின் தந்தை, “டேய் எதுக்குடா சரியா வேலைக்கு போக மாட்றா. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்னோட வாழ்க்கைதான் நாசமா போகும்” என ராஜேஷை பலமுறை கண்டித்துள்ளனர்.

 

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ராஜேஷ், தொடர்ந்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். அதே சமயம், ராஜேஷ் மதுபோதையில் இருக்கும்போதெல்லாம் தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பெண்களை கிண்டல் செய்வார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷின் பக்கத்து வீட்டில் 9 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், அந்த சிறுமி பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ராஜேஷ் அந்த சிறுமியை கிண்டல் செய்வது வழக்கம். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த ராஜேஷ் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியும் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

இதையடுத்து, அச்சிறுமியிடம் தனது சபல புத்தியை காட்டிய ராஜேஷ், விளையாட்டு பொம்மைகள் தருவதாகக் கூறி, அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, “இதை பற்றி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர், என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி, ராஜேஷ் தன்னிடம் செய்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளனர்.

 

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்