சிதம்பரம் அருகே வண்டெட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
விருதாச்சலம் பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (20), இன்ஜினீயரிங் பட்டதாரி. இவர், பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். கடந்த ஆறு மாத காலமாகக் காதலிப்பதாகப் பழகி மாணவியை ஏமாற்றி அவரது வீட்டுக்கே வந்து பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் திங்கள்கிழமை விஜயதசமியன்று மாணவியின் தாய் ஆசிரியை என்பதால், பள்ளிக்குச் சென்றபோது, வீட்டுக்கு வந்து மாணவியுடன் இருந்துள்ளார் ஜெயக்குமார்.
அப்போது பள்ளிக்குச் சென்ற மாணவியின் தாய், சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது இருவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர்களை சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இளைஞரின் செல்ஃபோனை ஆய்வு செய்தபோது, அவர் பல பெண்களுடன் இதுபோல் இருந்தது தெரியவந்தது. அவர் மீது 'போக்ஸோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.