Skip to main content

‘நானெல்லாம் ரவுடி தெரியுமா...?’ நூலகத்திற்கு வரும் மாணவிகளை மிரட்டிய ரோமியோ கைது!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

Youth arrested by salem police who disturbed women

 

சேலத்தில், நூலகத்திற்கு வரும் கல்லூரி மாணவிகளை கேலி, கிண்டல் செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் குமாரசாமிப்பட்டியில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி., குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் படித்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் நூலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 30 வயதுள்ள ஒரு வாலிபர், நூலக வளாகத்தில் நின்றிருந்த மாணவிகள் சிலரிடம், ''ஏய்... செல்லக்குட்டி நல்லாருக்கியா?'' எனக் கேட்டுள்ளார். 

 

முன்பின் தெரியாத ஒருவர் தங்களிடம் வந்து அசிங்கமாக பேசுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், அந்த வாலிபரை திட்டியுள்ளனர். அப்போது அந்த இளைஞர், ''நான் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பெரிய ரவுடி. என்கிட்ட முறைச்சிக்கிட்டீங்கன்னா அவ்வளவுதான்...'' எனக் கொலை மிரட்டல் விட்டுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் அந்த வாலிபரை தட்டிக் கேட்டுள்ளனர். ''என் பேர் சரத். கிச்சிப்பாளையம் ரவுடி. உங்களால் என்ன செய்ய முடியும்?'' என மீண்டும் மிரட்டியுள்ளார். இதனால் நூலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

 

இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. காவல்துறையினரின் கவனத்துக்கும் சென்றது. இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் கொடுக்காத நிலையில், காவல்துறையினரே முன்வந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவிகளிடம் கேலியாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர், சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவைச் சேர்ந்த சரத் (28) என்பது தெரியவந்தது.

 

இதையடுத்து அவரை காவல்நிலையத்திற்கு பிடித்து வந்து விசாரித்தனர். அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. படித்துள்ள அவர், அடிக்கடி கல்லூரிக்கும் நூலகத்திற்கும் பொழுதுபோக்காக வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நூலகத்திற்கு வரும் மாணவிகளை நலம் விசாரிப்பது போல் தொடர்ந்து அவர்களை கேலி, கிண்டல் செய்துள்ளார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரிடம் புகாரைப் பெற்ற அஸ்தம்பட்டி காவல்துறையினர் சரத்தை கைது செய்தனர். அவர் மீது மாணவிகளை கேலி செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான வாலிபரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மத்திய சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்