Skip to main content

சென்னையில் பரபரப்பு; இளைஞர் கடத்திக் கொலை

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Youth abducted and incident in Poonamallee, Chennai

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்(என்ற)கருக்கா ஸ்டீபன்(22). நேற்று முன்தினம்(7.3.2024) வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். வீட்டின் அருகே வந்தபோது மர்ம நபர்கள் ஸ்டீபனை காரில் கடத்தி சென்றனர். இதனை கண்டதும் அவரது பெற்றோர் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நசரத்பேட்டை போலீசார் ஸ்டீபனை கடத்தி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் அங்கிருந்து இரண்டு பேர் கத்தியுடன் தப்பி ஓடியுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த ஸ்டீபன் உடல் அருகே போதையில் மயங்கி கிடந்த விக்னேஷ், ஈசாக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

இந்த கொலை சம்பவத்தில் மலையம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(22), அன்பு(21), ஈசாக்(23), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ் தரப்புக்கும், ஈசாக் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இரு தரப்பினரும் அடிக்கடி மாறி, மாறி தாக்கிக் கொண்ட சம்பவமும் அரங்கேறி இருந்தது. 

கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் நண்பரான பிரவீன் என்பவரின் செல்போனை ஸ்டீபன் பிடுங்கி கொண்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகமானது இதனால் ஸ்டீபனை தீர்த்து கட்ட முடிவு செய்த ஈசாக் தரப்பினர், அதிக போதையில் காரை வாடகைக்கு எடுத்து கொண்டு ஸ்டீபனை காரில் கடத்தி சென்று மலையம்பாக்கம் பகுதியில் வைத்து கொலை செய்ததும், கொலை செய்த பிறகு அதிக போதையில் இருவர் இருந்ததால் தப்பிச் செல்ல முடியாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. 

அவர்களிடமிருந்து போதை ஊசிகள் சிலவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.