Skip to main content

தலை விரித்தாடும் போதை கலாச்சாரம்.. வாலிபர் பலி

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

Youngster passed away in trichy

 

திருச்சி மேலச் சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் ஜாவித் (வயது 24) கார் டிரைவர். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாவித்தின் பால்ய நண்பர் ஆசிக் பாட்ஷா (21). இவர்களது நண்பர்கள் உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகிய அனைவரும் தென்னூர் உழவர் சந்தை அருகே சம்பவத்தன்று இரவு ஒன்று கூடினர்.

 

இவர்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர்கள், போதை ஊசி போட்டுக் கொள்வதற்காக, ஒரு மாத்திரை, 300 ரூபாய் என மொத்தம், 1,500 ரூபாய் பணத்தை கொடுத்து 5 போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளனர். டிஸ்டில்டு வாட்டர் (வடிநீர்) கொண்டு மாத்திரையை கலக்கி, அந்த கரைசலை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர்.

 

செலுத்திய சில நிமிடத்தில் ஜாவித், சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போதை நண்பர்கள், அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஜாவித் மரணம் குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கேன்ஸர் (புற்றுநோய்) நோயாளிகளின் கொடூரமான உடல் வலிக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையை தான் இவர்கள் போதைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து, 3 மணி நேரம் முதல், 5 மணி நேரம் வரை, நீடிக்கும் போதைக்காக, ஜாவித் உள்ளிட்ட ஐந்து பேரும், தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ராம்நாத் என்பவரிடம் இருந்து, ஒரு மாத்திரை 300 ரூபாய் கொடுத்து ஐந்து மாத்திரைகள் வாங்கி இருக்கின்றனர்.

 

அதையடுத்து, போதை மாத்திரை சப்ளையர் ராம்நாத், ஜாவித்தின் நண்பர்கள், ஆசிக், அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவுச் செய்தனர். ராம்நாத் (32), ஆசிக் பாட்ஷா (21) ஆகியோரை கைது செய்தனர். ராம்நாத்திடம் இருந்து, 18 போதை மாத்திரைகள், ஒரு போதை மருந்து பாட்டில், ஒரு ஊசி மற்றும், 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.