Youngster arrested under pocso near salem

Advertisment

அரூர் அருகே பள்ளிச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை, காவல்துறையினர் போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மார்ச் 8ம் தேதியன்று மாலை பள்ளி முடிந்து சக மாணவியுடன் அந்தச்சிறுமி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமியின் வீடு அருகே வசித்து வரும் நவாப்ஜான் (20) என்ற வாலிபர் சிறுமியையும், அவருடன் வந்த சக மாணவியையும் வண்டியில் அழைத்துச்சென்று வீட்டில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்.

சிறிது தூரம் சென்ற நிலையில், தனது வண்டியில் ஒரே நேரத்தில் மூன்று பேர் அமர்ந்து செல்லும் அளவுக்கு இடம் போதுமானதாக இல்லை எனக்கூறி, அந்தச் சிறுமியை மட்டும் முதலில் வீட்டில் விட்டுவிட்டு பின்னர் வந்து சக மாணவியை அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

Advertisment

இதை நம்பி, 15 வயது சிறுமியுடன் வந்த சக மாணவி பாதி வழியிலேயே இறங்கிக் கொண்டார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்ற நவாப்ஜான், தன்னுடன் வந்த சிறுமியை அங்கிருந்த முள் புதர் பகுதிக்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்தச் சிறுமி பயங்கரமாக கத்தி கூச்சல் போட்டார். அந்த வழியாகச் சென்ற சிலர் அங்கே ஓடி வருவதை அறிந்ததும், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நவாப்ஜான் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.