Skip to main content

பேஸ்புக் மூலம் சிறுமிகளை காதல் வலையில் சிக்கவைத்து நகைகள் பறிப்பு - சென்னை இளைஞர் கைது!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
face


சென்னையில் பேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி, அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து, 20 சவரன் நகைகளை பறித்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கையில் ரோஜாவுடன் இருக்கும் சினிமா கதாநாயகன் போல் இருப்பவர் தான் ராகுல் குமார். சென்னை சூளைமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவரான இவர், தனது பெயரை ஸ்டைலாக இருப்பதற்காக வில்லியம்ஸ் ராகுல் என பெயரை மாற்றி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பேஸ்புக்கில் இவரது பக்கத்தை திறந்தால், பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் வகையில் நவநாகரீக உடையுடன் ஸ்டைலாக இளம்பெண்களை கவர்ந்து இழுக்கும் அளவிற்கு விதவிதமான புகைப்படங்களை வைத்துள்ளார். பேஸ்புக்கில் உள்ள பள்ளி சிறுமிகளை குறிவைத்து, அவர்களின் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து, அவர்களை தன்வசப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவரின் பேஸ்புக் பதிவு மூலம் சென்னை எம்.எம்.டி.ஏ.காலனியிலுள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இச்சிறுமியை தனது காதல் வலையில் விழவைத்த அவர், சிறுமியின் நம்பிக்கையை பெறும் வகையில் பீச், தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தான் சுயதொழில் தொடங்க, லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதாகவும் இதற்கு உதவும் படியும் சிறுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு சிறுமி தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதையடுத்து, வீட்டிலிருக்கும் நகைகளை எடுத்துவரும் படி மூளைச்சலவை செய்துள்ளார். ராகுலின் பேச்சில் மயங்கிய சிறுமி சிறு, சிறு நகைகளாக 20 சவரன் நகைகளை தந்துள்ளார்.
 

face


இந்நிலையில் நகைகளை காணவில்லை என பெற்றோர் தேடியபோது தான் சிறுமி தனது நண்பருக்கு அளித்ததை கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் ராகுலிடம் கேட்டபோது, முறையான பதில் இல்லாததை அடுத்து சென்னை அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது அனைவரிடம் ஆண்டராய்டு ஸ்மாரட் போன் உள்ளதால், சமூக வலைதளத்தை வீட்டிலுள்ள குழந்தைகள் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸ்.  

 

 

குறிப்பாக சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பள்ளி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பெற்றோர்கள் உன்னிப்பாக கண்காணித்திட வேண்டும். அவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என்பதை கவனித்து அவர்களுக்கான அறிவுரையை பெற்றோர்கள் வழங்கிட வேண்டும் என மனநலமருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

முன்பெல்லாம் சமூக வலைதளத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் கணினி தேவைப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட் போன் வந்து விட்டதால் அது மிகவும் எளிதாகவிட்டது. ஒருவர் சமுக வலைதளத்தில் தம்மை பற்றி கூறப்படும் தகவல் அனைத்தும், உண்மை தானா என்பதை ஆராயாமல் அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையே என்று கண்மூடித்தனமாக நம்புவதால் தான் இதுபோன்ற தவறுகள் நடப்பதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பிறகாவது பெற்றோர், தங்களது பிள்ளைகளை கண்காணித்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.