சென்னை வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரியில் நேற்று முன்தினம், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடல் மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஏரியில் மிதந்த பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்தது யார் என அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து வந்தனர். அந்த கேமரா பதிவில், பெண் ஒருவர் குழந்தையை ஏரியில் வீசிக் கொன்றது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில், அந்த பெண் வேளச்சேரி ஏரிக்கரை தெருவை சேர்ந்த சங்கீதா (23) என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நேற்று காலை சங்கீதாவை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த விசாரணையில் சங்கீதா கூறியதாவது, “எனது கணவர் பெயர் கார்த்திக். அவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். எங்கள் இருவருக்கும் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு குழந்தை மட்டும் போதும் என்று எனது கணவர் கூறிவிட்டார். இந்நிலையில், நான் வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்தும் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
நாங்கள் அடிக்கடி தனிமையில் இருந்திருக்கிறோம். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதை அறிந்த மளிகை நடத்தும் காதலன் என்னிடம் கருவை கலைத்துவிடக் கூறி மாத்திரை வாங்கிக் கொடுத்தார். ஆனால், அந்த மாத்திரை சாப்பிட்ட போதிலும் கரு கலையவில்லை. இந்நிலையில், எனது கணவர் கார்த்திக் என்னிடம் ‘வயிறு பெரிதாக இருக்கிறதே’ என்று கேட்டார். ஆனால், அந்த கருவை மறைப்பதற்காக ‘சாப்பிட்டு வீட்டிலேயே படுத்து தூங்குவதால் எனது உடல் பருமனாக இருக்கிறது’ என்று சமாளித்துவிட்டேன்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை எனக்கு பிரசவ வலி ஏற்பட்டு எங்கள் வீட்டு கழிவறைக்கு சென்று பெண் குழந்தையை பெற்று எடுத்தேன். இந்த விஷயம் எனது கணவருக்கு தெரியக்கூடாது என்பதற்காக பிறந்த பெண் குழந்தையை தூக்கிச் சென்று ஏரியில் வீசி கொலை செய்தேன்” என்று தெரிவித்தார். இதனையடுத்து, பிறந்த பெண் குழந்தை யாருக்கு பிறந்தது என்பதை அறிய காவல்துறையினர் டி.என்.ஏ பரிசோதனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். மேலும், சங்கீதா மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.