Skip to main content

அப்ப அவங்க தொழிலதிபர் இல்லையா? - நகைக் கடைக்காரரை ஏமாற்றிய இளம்பெண்!

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

young woman who cheated a jeweler by pretending to be a businessman was arrested

 

காரைக்காலில் கவரிங் நகையை தங்க நகை எனக் கூறி அடகு வைத்தும் விற்பனை செய்தும் கோடிக்கணக்கில் மோசடி செய்த மாபியா கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

காரைக்கால் பெரமசாமிபிள்ளை வீதியில் நகைக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் 12 பவுன் செயினோடு வந்து, “இதை அடகு வைக்கணும். அவசரமா பணம் தேவைப்படுது. அரசுத்துறை வங்கிகளில் வைத்தால் என் தேவைக்கான பணம் கொடுக்கமாட்டாங்க. எவ்வளவு வட்டியானாலும் பரவாயில்லை, ஒரு மாதத்தில் மீட்டுக்கொள்கிறேன்” எனக் கேட்டுள்ளார். அடகு கடைக்காரரான கைலாஷ் அந்த மர்மநபரிடம் இருந்த நகையை வாங்கி சோதனை இயந்திரத்தில் பரிசோதித்தார். அதில் 916 ஹால்மார்க் எனக் காட்டியிருக்கிறது. 12 பவுனுக்கும் நான்கு லட்சம் கேட்டதால் தனது சித்தப்பா பாலமுரளிக்கு போன் மூலம் தகவலைக் கூறியிருக்கிறார் கைலாஷ்.  

 

கைலாஷின் கடைக்கு வந்த பாலமுரளி நகையைச் சோதித்ததும் அந்த நகையின் மீது ஒருவித சந்தேகம் வர, அதை துண்டித்து பரிசோதித்திருக்கிறார். துண்டித்ததும் செப்புக் கம்பியில் தங்கமுலாம் பூசியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காரைக்கால் நகர காவல்நிலையத்தில் தகவலைக் கூறியுள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீசார் நூதனமான முறையில் போலி நகையை அடமானம் வைக்க வந்த நபர் குறித்து விசாரித்ததில் அவர் காரைக்கால் சின்னக்கண்ணுசெட்டி தெருவைச் சேர்ந்த பரசுராம் என்பது தெரியவந்துள்ளது.

 

பரசுராமிடம் நடத்திய விசாரணையில், தன்னிடம் நகையைக் கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் என்றும் அவர் திருநள்ளாறு சாலையில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து போலி நகையை விற்கச் சொன்ன ரிபாத் காமில், பரசுராம் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், புதுச்சேரி காவல்துறையில் நிரவி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெசிமென்ட், நேதாஜி நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எனக் காட்டிக்கொண்ட அழகி புவனேஸ்வரி மற்றும் ரமேஷ் உள்ளிட்ட பெரிய பட்டியலையே கூறியுள்ளனர். மேலும், அழகி புவனேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோமின் கள்ளக்காதலி என்றும், இருவரும்  கோவை சென்று போலி தங்க நகையை தயாரித்து வந்து தங்களிடம் கொடுப்பார்கள் எனக் கூறியுள்ளனர். 

 

புவனேஷ்வரி எப்போதுமே நகைகள், கண்கவர் ஒப்பனை, விலை உயர்ந்த காரில் பவனி வந்ததால், இவரை உண்மையாகவே தொழிலதிபர் என நம்பி பலரும் மிரண்டு கிடந்தனர். போலி நகை விவகாரத்தில் புவனேஸ்வரியை போலீசார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவானார். புவனேஷ்வரி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை வைத்து அவரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் அவரை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.