திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கலைவாணி கம்மங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் தனித்தனியாக செய்து வருகிறார்கள்.
இதில் முத்துலட்சுமி தனது தந்தை சிங்கதுரையுடன் சேர்ந்து இளநீர் வியாபாரத்தை கவனித்து வந்தார். இந்தநிலையில் தொழில் போட்டி காரணமாக முத்துலட்சுமிக்கும் அவரது அக்கா கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது.
கடந்த 6ந் தேதி மாலை கலைச்செல்வி, அவரது கணவர் நாகராஜ் ஆகியோர் சிங்கதுரையிடம் அங்கு இளநீர் கடை போடக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே முத்துலட்சுமி தனது தந்தைக்கு ஆதரவாக நாகராஜை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியின் தலையில் வெட்டினார். முத்துலட்சுமி ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, நாகராஜ், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்தனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை அரசு மருத்துவமனை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து உள்ளனர்.