Skip to main content

"நீ இல்லாம நான் எதுக்கு உயிரோடு இருக்கணும்" - உருக்கமான கடிதம் எழுதிவிட்டு உயிரைவிட்ட இளம்பெண்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Young woman passed away love issue

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகில் உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயாத்துரை என்பவரின் 22 வயது மகள், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். ரிஷிவந்தியம் அருகில் உள்ள நூரோலை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் ஆகாஷ். இவர்கள் இருவரும் தங்கள் பள்ளிகாலத்தில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

 

இவர்களது காதல் சமீபத்தில் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்து பிரச்சனையாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் பிறகு ஐயாத்துரை தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என மாவட்ட சமூகநல அலுவலருக்கு ஐயாதுரை மகள் புகார் செய்து நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அதன் பிறகு பெற்றோருடன் வசிக்காமல் சில நாட்கள் பெண்கள் விடுதியில் தங்கி இருந்துள்ளார். 

 

கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்துபோன தனது காதலரான ஆகாஷ் வீட்டிற்கு சென்ற அங்கு தங்கியிருந்துள்ளார். காதலனை மறக்க முடியாத அவர், கடந்த 17ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

அந்த கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னால் என் காதலன் ஆகாஷ் இல்லாமல் இருக்க முடியவில்லை. அவரது நினைவு என்னை வாட்டுகிறது. அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த இடத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவர்கூட நான் பழகியது, வாழ்ந்தது எல்லாம் எப்போதும் எந்தக் காலத்திலும் மறக்கமுடியாதது. அதனால் அவருடன் வாழ்ந்ததுதான் என் கடைசி வாழ்க்கை. எனக்கு கணவர் அவர் மட்டும்தான். ஆகாஷ் நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம். நீ மட்டும் தான் என்னோட உலகம், நீ இந்த உலகத்தில் இல்லாமல் நான் எதுக்கு உயிரோடு இருக்கணும். மேலும் அப்பா அம்மா தம்பி பாப்பா எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். என்னோட மாமா  இல்லாமல் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் இறந்த பிறகு அவரை அடக்கம் செய்த இடத்தில் என்னையும் அடக்கம் செய்யுங்கள்” என்ற உருக்கமான மூன்று பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.