Skip to main content

பட்டதாரிப் பெண் கொலையும் மர்மங்களும்; நாமக்கல்லில் தொடரும் பதற்றம்; திணறும் போலீஸ்

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

young woman passed away case there is a tense situation in namakkal

 

பரமத்தி வேலூர் அருகே, ஆடு மேய்க்கச் சென்ற பட்டதாரிப் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறி வரும் மர்ம நபர்களின் நாச வேலைகளால் சுற்று வட்டார கிராம மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.     

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி.  இவருடைய மனைவி நித்யா (28). இவர், கடந்த மார்ச் 11 ஆம் தேதி, அதே பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அன்று மாலை அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் நித்யாவை மர்ம நபர்கள், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, அதே ஊரில் இயங்கி வரும் கரும்பாலையில் வேலை செய்து வந்த, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனாலும் நித்யாவின் உறவினர்கள், இந்த கொலையின் பின்னணியில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும்,  குறிப்பாக குறிப்பிட்ட ஒருவரின் கரும்பாலையில் வேலை செய்து வந்த நான்கு வடமாநிலத் தொழிலாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும்  புகார் கிளப்பினர். 

 

இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி, ஜேடர்பாளையத்தைச்  சேர்ந்த எம்ஜிஆர் என்கிற முத்துசாமி நடத்தி வரும் கரும்பாலையில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் ராகேஷ் (19) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவை மண்டல காவல்துறை ஐஜி சுதாகர் தலைமையில் சேலம் சரக டிஐஜி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு  மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஜேடர்பாளையத்தில் குவிக்கப்பட்டனர். புதிய சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்களை கிராமத்திற்குள் நுழையத் தடை விதித்தனர். இந்த பரபரப்புக்கு இடையே, கரும்பாலை உரிமையாளர் முத்துசாமியின் மருமகன் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில்  இருந்த 600க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.  

 

நித்யா கொலைக்குப் பிறகு ஏற்கனவே வீ.கரப்பாளையம், வடகரையாத்தூர் கிராமங்களில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, டிராக்டர், பேருந்துக்கு தீ வைப்பு, விவசாய கருவிகளுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருந்தது. இந்நிலையில், காவல்துறைக்கு சவால் விடும் விதமாக மீண்டும் மர்ம நபர்களின் அட்டகாசம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு சின்ன மருதூரில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. அங்கு 2  ஏக்கர் பரப்பளவில் பாக்கு மரங்களைப் பயிரிட்டுள்ளார். ஜூன் 24 ஆம் தேதி நள்ளிரவில் சவுந்தரராஜனின் தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 1500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.

 

இந்த சம்பவத்தோடு நில்லாமல் அதே பகுதியில் உள்ள தங்கமுத்து, சுப்ரமணி, இளங்கோவன், ராமலிங்கம், சாமியப்பன், செந்தில்  ஆகியோருடைய தோட்டங்களிலும் புகுந்த மர்ம நபர்கள், பம்ப் செட் குழாய்களையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் வழி நெடுகிலும் மரவள்ளிக்கிழங்கு செடிகளையும் பிடுங்கி வீசியெறிந்து விட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணா மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். நாமக்கல்லில் இருந்து காவல்துறை மோப்ப நாய் ஷீபா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த நாய், தோட்டம் முழுவதும் சுற்றிவிட்டு, பின்னர் முதன்மைச் சாலை வரை சென்று நின்றுவிட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் பாக்கு மரங்களில் பதிவாகி இருந்த விரல் ரேகை தடயங்கள், கால் தட அச்சுகளை பதிவு செய்தனர். இந்த நாச வேலையில் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

நித்யா கொலை வழக்கை சிபிசிஐடி காவல்துறையினரும், மர்ம நபர்களின் நாச வேலைகள் குறித்த வழக்குகளை உள்ளூர் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரளவு அமைதி திரும்பிய நிலையில் மர்ம நபர்களின் நாச வேலைகள் மீண்டும் தொடங்கியதால், காவல்துறை ஐஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆகியோர் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர். இந்த சம்பவத்தால் ஜேடர்பாளையம் சுற்று வட்டார கிராமங்களில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேநேரம் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நித்யா கொலை செய்யப்பட்டு 100 நாள்களுக்கு மேலாகியும் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததோடு, நாச  வேலைகளில் ஈடுபடும் மர்ம நபர்களையும் கண்டுபிடிக்காமல் காவல்துறையினர் திணறி வருவதாகவும் பொதுமக்களிடையே அதிருப்தி  கிளம்பியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.