Karaikal

Advertisment

காரைக்கால் எல்லையில் மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடந்த 14 வயது சிறுமியின் நிலையை கண்ட பலரையும் முகம் சுவிக்கவே செய்தது.போதையில் கிடந்த சிறுமியை தமிழக போலிசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் பத்துக்கும் அதிகமான மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. வாஞ்சூர் நாகை, திருவாரூர் மாவட்ட எல்லையில் இருப்பதால் தமிழக குடிமகன்கள் அங்கு குவிகின்றனர். போதைக்கு அடிமையான பெண்களையும் அழைத்து வந்து, மது வாங்கி கொடுத்து அனுபவித்து விட்டு அப்படியே விட்டு விட்டு போவதும், அவர்கள் வீதிகளிலும், வீதியோரம் உள்ள காடுகளிலும் கிடப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இளம் பெண் போதையில் பிரதான சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தது பலரையும் உச் கொட்ட வைத்தது. அந்த பெண் கிடந்தது காரைக்கால் எல்லையில், அவரை அங்குள்ள காக்கிகள் ஆட்டோ மூலம் தமிழக எல்லையில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்று விட்டனர்.

Advertisment

அந்த சிறுமிக்கு 3 பேர் மது வாங்கிக் கொடுத்து அழைத்து வந்ததை கவனித்து வந்த செல்லதுறை என்பவர் கூறுகையில்,

" வாஞ்சூர் பெட்ரோல் பங்குக்கு உள்ளே உள்ள மதுபானக் கடைக்கு அந்த சிறுமியை ஒரு வயதானவர், இரண்டு பேர் நடு தர வயதுடையவர்கள், பிறகு ஒதுக்குப் புறமா சரக்கோடு போனாங்க 1 மணி நேரம் கழிச்சி அந்த பெண் போதை தலைகேறி சாலையோரத்தில் மயங்கி கிடக்க, அந்த சிறுமியை அழைத்து வந்து மதுவாங்கி கொடுத்த இரண்டு நபர்கள் சாலையில் அடித்து கொண்டனர். ஒருவன் ஓடி விட்டான்.

இதனை பார்த்த அங்கு வந்த பாதுகாவலர்களும் மற்றும் பொதுமக்களும் சிறுமிக்கு மதுவாங்கி கொடுத்த அவர்களை அடித்து துவைத்ததோடு அவர்களை பிடித்துவைத்து காரைக்கால் திருப்பட்டினம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த புதுச்சேரி போலீசார் சிறுமிக்கு முதலுதவி அளிக்காமல், மயக்கநிலையில் இருந்த சிறுமி மற்றும் அழைத்து வந்த நபர்களை ஆட்டோ பிடித்து தமிழக எல்லைக்கு அனுப்பிவைத்து விட்டனர்.

Advertisment

பின்னர் தமிழக எல்லை பகுதியான நாகூரில் அந்த சிறுமியை சாலையில் வீசிவிட்டு அந்த நபர்கள் தப்பியோடினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் நாகூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் 108 வாகனம் மூலம் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் அந்த சிறுமி திருச்சி துறையூரை சேர்ந்தவர் என்பதும், தனது தாயுடன் நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.நாகூர் தர்காவில் இருந்து அந்த சிறுமியை அழைத்து வந்து மது வாங்கி கொடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.