கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இளம்பெண் கடத்தல்; விரட்டிச் சென்ற போலீஸ் - பகீர் சம்பவம் 

Young woman kidnapped at Kilambakkam bus stand

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சேலத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினரை பார்க்கச் சேலத்தில் இருந்து பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திங்கட்கிழமை(3.2.2025) இரவு வந்துள்ளார். பின்னர் மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்துள்ளார். அந்த சம்யத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் மாதவரத்தில் இறக்கி விடுவதாக கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் மறுக்கவே, கத்தியை காட்டி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஓட்டுநர் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சில கிலோமீட்டர் சென்ற பிறகு அடையாளம் தெரியாத இரண்டு பேர் ஆட்டோவில் ஏறியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ ஜி.எஸ்.டி. சாலை வழியாக இரும்புலியூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோவில் இருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டபோது அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் தாம்பரம் போலீசார் ரோந்து வாகனத்தில் சம்பந்தப்பட்ட ஆட்டோவை துரத்திச் சென்றுள்ளனர். அப்போது நெற்குன்றத்தில் உள்ள ஒரு இடத்தில் பெண்ணை இறக்கிவிட்டு அதில் இருந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்பு அந்த பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் அடிப்படையில் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

kidnapped
இதையும் படியுங்கள்
Subscribe