நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் ஏரியாவைச் சேர்ந்த சாலமோன் (24). ப்ளஸ் 2 வரை படித்த இந்த வாலிபரின் சகாக்கள் மனோசேட், ஜான்சன். அனைவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாலமோன் அதே தெருவிலிருக்கும் கல்லூரிப் படிப்பை முடித்த ஒரு இளம் பெண்ணோடு நெருங்கிப் பழகி, பின் காதலாகியிருக்கிறது.
நாளடைவில் இவர்களின் தொடர்பு வீடியோ காலில் தொடர்ந்து பேசுமளவுக்கு முற்றியிருக்கிறது. அவ்வாறு பேசும்போது சாலமோன் அந்தப் பெண்ணை வீடியோ காலில், ஆபாசமாகப் படம் பிடித்துப் பதிவு செய்து, தனது ஆடம்பரச் செலவிற்காகப் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.
இதனிடையே இந்த விவகாரத்தையறிந்த பெண்ணின் பெற்றோர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். இதனால் ஆத்திரமான சாலமோன், செல்ஃபோனில் அந்தப் பெண்ணிடம் நகை, பணம் கேட்டதுமில்லாமல் தனது நண்பர்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவரின் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்புவேன் என மிரட்டவே, அந்தப் பெண் பதறி மறுத்திருக்கிறார்.
பின்பு, தனியே இருந்த அப்பெண்ணை அணுகிய சாலமோன், அப்பெண்ணின் வீடியோவை அவளின் கணவருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்ட, அந்தப் பெண் பயந்துபோயிருக்கிறார். அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணிடமிருந்து லட்சத்திற்கும் மேலான மதிப்புள்ள தங்க நெக்லஸ் மற்றும் மோதிரத்தைப் பறித்துச் சென்றிருக்கிறார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய சாலமோன், கொலை மிரட்டலும் விடுக்க, மிரண்டு போன அந்தப் பெண் தனது பெற்றோர்களிடம் சம்பவங்களைச் சொல்லி கதறியிருக்கிறார்.
இதையறிந்த, சாலமோன் பழிவாங்கும் நோக்கில், அப்பெண்ணின் வீடியோவை அவளது கணவரின் செல்ஃபோனுக்கு அனுப்ப, எதையும் விசாரிக்காமல் கணவரின் வீட்டார், பெண்ணின் வீட்டில் கொண்டுவந்து விட்டுப் போய்விட்டனர்.
வேறு வழியில்லாமல், பெண்ணும் பெற்றோர்களும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க, அவர்களோ அதனைப் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப்பிடம் புகார் அளித்தனர். ஏ.எஸ்.பி.யின் உத்தரவுப்படி அந்த வழக்கு முக்கூடல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார், சாலமோன் அவனது சகாக்களான மனோசேட், ஜான்சன் ஆகிய மூவர் மீதும், 'கொலை மிரட்டல்', 'ஆபாச படமெடுத்து பாலியல் ரீதியாக மிரட்டுதல்' உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
தற்போது இந்த பாலியல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஜான்சன் ஏற்கனவே அதேபகுதியை சேர்ந்த 2 இளம் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களையும் தங்களது காதல் வலையில் சிக்கவைத்து ஆபாச படம் எடுத்து பணம் பறித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் ஜான்சன் கடந்த 02ம் தேதி கைது செய்யப்பட்டு நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாலமோன், மனோசேட், ஜான்சன் மூன்று பேருக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.