Skip to main content

கறிக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்கள்

Published on 05/08/2018 | Edited on 05/08/2018

 

j


வேலூர் மாவட்டம், பேராணம்பட்டு – ஆம்பூர் சாலையில் ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ரோட்டில் காட்டுப்பன்றி மீது இன்று ஆகஸ்ட் 5ந்தேதி காலை ஏதோ ஒருவாகனம் மோதியதில் காட்டுப்பன்றி இறந்து போய்விட்டது. இறந்துப்போன அந்த காட்டுப்பன்றி சாலையில் கிடந்துள்ளது.


இதுப்பற்றி சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்பூரிலிருந்து வனத்துறையினர் வருவதற்குள் சிலர் அந்த காட்டுப்பன்றியை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.


சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் விபத்து நடந்த இடத்தில் காட்டுப்பன்றி இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர். அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது, இரண்டு இருசக்கர வாகனத்தில் இறந்த காட்டுப்பன்றியை எடுத்து சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் போன வழியை காட்டியும் உள்ளனர்.


வனத்துறையினர் தேடிச்சென்றபோது, விபத்து நடந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு தனியார் நிலத்தில் சிலர் அமர்ந்து காட்டுப்பன்றியை தீயில் சுட்டு அதை பீஸ் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். இதைப்பார்த்து வனத்துறையினர் அவர்களை நெருங்கியுள்ளனர். வனத்துறையினர் வருவதை பார்த்து 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.


நேரு, விஜயகுமார் என்கிற இருவர் காட்டுப்பன்றியோடு சிக்கினர். அவர்களை ஆம்பூர் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர். தப்பி சென்ற 3 பேரை தேடிவருகின்றனர்.


விபத்து நடந்த இடத்தில் இருந்த தடயங்களை அழித்தது, காட்டுப்பன்றியை தூக்கி சென்றது உட்பட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் வனத்துறை தரப்பில். திருட்டு கறிக்கு ஆசைப்பட்டு இப்போது கம்பி எண்ணவுள்ளார்கள் அந்த இளைஞர்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Next Story

இம்ரான்கானுக்கு 24, மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தானில் பரபரப்பு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Imran Khan wife bushra bibi sentenced to 14 years in prison

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று (30-01-24) இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கை இன்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவரும் குற்றவாளி என்று கூறி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்ததோடு, இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிபர் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு தற்போது பரிசுபொருட்கள் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.