வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள தோட்டாளம் ஊராட்சி கொல்லாபுரம் வனப்பகுதி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் அவ்வழியாக வந்தபோது துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து அக்கம் பக்கம் பார்த்தபோது ரத்த கரைகள் நிறைந்த சேலை போர்த்தப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியானவர்கள், ஊருக்குள் சென்று கிராம மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டதும் ஆம்பூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்துறை அதிகாரிகள் அனுமதியுடன் அந்த இடம் தோண்டப்பட்டது.
இந்த தகவல் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடினர். பின்னர் காணாமல் போனவர்களைப் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மாதனூர் ஒன்றியம் பாலூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மனைவி செல்வி, கடந்த 30-ம் தேதி சனிக்கிழமை மாதனூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று அண்ணாதுரை காவல்துறையினருக்கு தெரிவித்தார். அந்த புகாரை பதிவு செய்யாமல் வைத்திருந்துள்ளது போலீஸ். அவரது குடும்பத்தினரை போலீஸ் அழைத்துவந்து போட்டோ, அங்க அடையாளங்களை கேட்டு வாங்கியது, புகாரும் வாங்கியது.
இந்த நிலையில் பெண் சடலத்தை கண்டு பிடித்து சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை மற்றும் வருவாய்த்துறையை கண்டித்து பாலூர் கிராம மக்கள் மாதனூர் ஒடுகத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து சடலத்தை தோண்டும் பணி செய்வதாக கூறியதின் பேரில் மறியல் கைவிடப்பட்டு களைந்து சென்றனர்.
வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கொண்ட குழுவை வரவழைத்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை முன்னிலையில் மருத்துவர்கள், சடலத்தை தோண்டி எடுத்தனர். அதனை மனைவி காணாமல் போனதாக புகார் கொடுத்திருந்த அண்ணாதுரை மற்றும் அவரது மகனுக்கும் காண்பித்தனர். இறந்து கிடப்பது தன்னுடைய தாய் தான் என்று அடையாளம் காண்பித்தார் அவரின் மகன். என் மனைவி தான் என்றார் அண்ணாதுரை. அதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அவரது கணவர் அண்ணாதுரையிடம் உடலை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட செல்வி, மாதனூர் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும், அதே தொழிற்சாலையில் செந்தில் மற்றும் அவர்களுடைய நண்பர் சுதாகருடன் பழக்கம் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது அதன் அடிப்படையில் ஆம்பூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் நகர் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் அவரது நண்பர் சுதாகர் உட்பட மூன்று பேரை கைது செய்து போலீஸ் விசாராணை நடத்தி வருகின்றனர்.
என் அம்மாவை எதற்காக கொலை செய்தார்கள்?, என்ன காரணம் என கேள்வி கேட்டு அழும் மகனையும், குடும்பத்தையும் என்ன சொல்லி சமாதானம் செய்வது எனத் தெரியாமல் தவிக்கின்றனர் அப்பகுதி மக்களும், உறவினர்களும்.