Skip to main content

மறைந்த தோழர் எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு காலணி வழங்கிய இளைஞர்கள்

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் எஸ்.பி.முத்துக்குமரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈர்ப்பில் படிக்கும் காலத்திலேயே இயக்கப் பணிகள் செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று போராடி வெற்றி வாகை சூடியவர்.

 அவரது செயல்பாடுகளால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள் மனதிலும் நின்றவர். இளம் வயதிலேயே கட்சியில் பல உயர்ந்த பதவிகளுக்கு வந்தவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்குப் பிறகு புதுக்கோட்டை மக்களின் நலப்பணிகள் சிறப்படைந்தது. ஒரு வருடம் மட்டுமே அந்தப் பணிகள் நடந்தது. அதன் பிறகு கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஒரு வருடத்தில் தொகுதி மக்களிடம் மட்டுமின்றி சட்டமன்றத்திலும் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்றும் சுருக்கமாக அதிகமான கேள்விகளை கேட்ட உறுப்பினா் என்ற பெயரையும் பெற்றார்.

 

 Young people who donated shoes to public school students

 

தோழர் முத்துக்குமரனின் இறப்பை அந்தக் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அனைத்து தரப்பு மக்களும் கண்ணீர் வடித்தனர். தோழர் நல்லக்கண்ணு சுடுகாடு வரை 2 கி.மீ நடந்து சென்று அஞ்சலி செலுத்தி கண் கலங்கினார்.
அவரது மறைவுக்குப் பிறகு நெடுவாசல் மட்டுமின்றி பல கிராம இளைஞர்கள் இணைந்து (கட்சிகள் பாகுபாடின்றி) எஸ்.பி.எம். அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் நலப்பணிகள் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு கஜா புயலில் பாதிக்கப்பட்ட பலருக்கு தற்காலிக வீடுகள் அமைக்கவும், தொழில் உதவிகள், வீட்டுக்கு வீடு தென்னை மற்றும் பலவகை மரக்கன்றகள் வழங்கினார்கள். ஆலங்குடி, பேராவூரணி தொகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுமார் 10 ஆயிரம் காலணிகளை வழங்கினார்கள்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 540 மாணவர்களுக்கு கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் மூலமாக காலணிகளை வழங்கினார்கள். காலணிகள் வழங்கிய இளைஞர்கள் மாணவர்களிடம் பேசும் போது..

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இளைஞர் மன்றத்தினர் நீர்நிலைகளை சீரமைத்து கரைகளில் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கிறோம். பனைமரக் காதலர்கள் 30 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளனர். இதுபோன்ற பொதுப் பணிகளில் மாணவர்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது.
 

ஸ்டைல் என்ற பெயரில் தலையில் கோடு போடுவது, ஒரு பக்கம் வெட்டுவது, குடுமி போல வைத்துக் கொள்வது, குருவிக் கூடு போல தலைமுடியை வைத்துக் கொண்டு தலைமுடியை அலங்கோலம் செய்து கொண்டு பள்ளிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.
தொடா்ந்து சலூன் கடைகளிலும் பள்ளி மாணவர்களுக்கு சிகை அலங்காரம் என்ற பெயரில் கோடு போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.