Skip to main content

நண்பனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள்!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Young people brutally incident a friend

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் 17 வயது ராமச்சந்திரன். 12 ஆம் வகுப்பு வரை படித்த ராமச்சந்திரன் படிப்பை பாதியில் நிறுத்தி மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்து வந்துள்ளார். தந்தை கலியபெருமாள் பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துபோக, இவரது மூத்த சகோதரியும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் குடும்பத்தின் சோக நிலையை கருத்தில் கொண்டு தன் உழைப்பின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வந்தார் ராமச்சந்திரன். இவரது தாய் மணிமேகலை கரும்பு வெட்டச் செல்லும் பணி செய்து வந்துள்ளார். அதன் காரணமாக அவர் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு ஈரோடு பகுதிக்கு சென்றுள்ளார். அதனால் ராமச்சந்திரன் தனது பாட்டியுடன் ஊரிலேயே தங்கி மாட்டு வண்டி ஓட்டி வந்துள்ளார். 

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ராமச்சந்திரன் தனது ஊரில் உள்ள கடைக்கு கூல் ட்ரிங்ஸ் வாங்குவதற்கு சென்றுள்ளார். அதேநேரம் அவரது ஊரைச் சேர்ந்த நண்பர்கள் மோகன்ராஜ் (20), கந்தசாமி (18) ஆகிய இருவரும் மது போதையில் ராமச்சந்திரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இருவரும் மேலும் இரு சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது ராமச்சந்திரனின் சத்தம் கேட்டு அவரது பாட்டி கூச்சல் போட்டு கத்தியுள்ளார். அதனால் அந்த நான்கு பேரும் தப்பித்து ஓடியுள்ளனர். இதனிடையே ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ராமச்சந்திரனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக் கூறிய ராமச்சந்திரனின் உறவினர்கள் கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

 

இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மடப்பட்டு பகுதியில் கஜேந்திரன்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் விசாரணை செய்தனர். அதில், மோகன்ராஜ், கந்தசாமி, கஜேந்திரன் மற்றும் பிடிபட்ட அந்த 17 வயது சிறுவன் ஆகிய நால்வரும் ராமச்சந்திரனை வீடு தேடிச் சென்று வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜ், கந்தசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இருவர் மீதும் திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தவர்கள் தற்போது ராமச்சந்திரனை கொலை செய்துள்ளனர். ஏற்கனவே ராமச்சந்திரன் இவர்களுடன் நண்பராகப் பழகியுள்ளார். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, கைது செய்யப்படுவது, ஜெயிலுக்கு செல்வது என வாழ்க்கை மாறியதால் அவர்களுடன் பழகுவதை ராமச்சந்திரன் நிறுத்தி உள்ளார். சிறைக்கு சென்று வந்த பிறகு ராமச்சந்திரன் தங்களுடன் பேசவில்லை என்ற கோபம், மேலும் தங்களைப் பற்றி ராமச்சந்திரன் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்து தாங்கள் கைது செய்யப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மோகன்ராஜ், கந்தசாமி இருவரும் அவரது சக நண்பர்களுடன் சேர்ந்து ராமச்சந்திரனை கொலை செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.