
திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் ஊற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், புலிவலம் அருகே உள்ள நல்லவன்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி, தனது கிணற்றில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டதால் அதனை வெளியே எடுப்பதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது, மோட்டாரை மேலே தூக்க முயன்றபோது தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்து அவரை மீட்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த அரசு, காமேஸ்வரன் என்ற இரு இளைஞர்கள் 96 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி அவரைக் கயிற்றில் கட்டி மேலே அனுப்பியுள்ளனர். அதையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமசாமியின் அண்ணன் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதேசமயம், ராமசாமியை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கிய அரசு, காமேஸ்வரன் ஆகியோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அரசு, காமேஸ்வரன் ஆகியோரைக் கயிறு கட்டி கிணற்றுக்குள் இருந்து உயிருடன் மீட்டுள்ளனர்.