Young man tried lost life his lover in chennai

Advertisment

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று முன் தினம் (17-10-23) தனது பாட்டியுடன் கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் (27) என்பவர், அவர்களை வழிமறித்து அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். மேலும், அவர், அந்த பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் வெட்டப் பாய்ந்தார். அவரது கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பிய அந்த பெண், காவல்துறையினரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், புகார் அளித்த பெண்ணும், ராஜ்குமாரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, ராஜ்குமாருக்கு சில தவறான பழக்கங்கள் இருந்ததால், அந்த பெண் அவரை விட்டு விலகி வந்துள்ளார். ஆனால்ராஜ்குமார், தன்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, அந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனை அறிந்த ராஜ்குமார், அந்த பெண்ணைகொலை செய்யும் வகையில் அவரை வழிமறித்து பிளேடால் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, காவல்துறையினர் ராஜ்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.