young man passed away after falling from a moving train

கரூர் மாவட்டம் குளித்தலையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இறந்தது, திருச்சி உறையூரை சேர்ந்த போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதி ரயில்வே கேட் கிழக்கு பகுதி சிக்னல் அருகே, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு ஓடும் ரயிலில் கீழே விழுந்து இறந்த நிலையில் கிடப்பதாக அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று காலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கரூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்த நிலையில் கிடந்த சடலத்தை ஆய்வு செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து அவரது ஆதார் கார்டு மூலமாக அவர் யார் என்பதை அடையாளம் கண்டனர்.பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

சடலத்தை கைப்பற்றிய போலீசார் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் இறந்த நிலையில் கிடந்தவர், திருச்சி மாவட்டம், உறையூர் பகுதி பனிக்கன் தெருவை சேர்ந்த வடிவேல் மகன் யுவராஜ் சங்கர் (35) என்பதும், யுவராஜ் சங்கர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்றும், இவர் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் திருச்சி காவல் நிலையப் பகுதிகளில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் சங்கர் குளித்தலை பகுதிக்கு எதற்காக வந்தார்? திருடுவதற்கு வந்தாரா? எப்படி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இறந்தார்? என்பது குறித்தும், வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.